"அரசியலுக்கு வந்தால் நிதானம் தேவை!" - நடிகர் ராகவா லாரன்ஸிற்கு சி.பி.ஐ மாநில செயலாளர் கொடுத்த அட்வைஸ்!
எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை June 16, 2026 02:14 PM

மயிலாடுதுறை: தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) சார்பில் வரும் ஜூன் 29-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார். மேலும், சபாநாயகர் என்பவர் ஒரு கட்சியின் பிரதிநிதி அல்ல என்றும், அவர் சட்டமன்ற விதிகளை எக்காரணம் கொண்டும் வழுவக்கூடாது என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் இடும்பையன் மறைவையொட்டி, அவரது படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு, இடும்பையனின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியன், தமிழகத்தின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் விவசாயப் பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை

செய்தியாளர்கள் சந்திப்பில் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்துப் பேசிய மு.வீரபாண்டியன்; "தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு மற்றும் பயிர் கடன்கள் அனைத்தையும் அரசு நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசும் தாராளமாக வழங்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஜூன் 29-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன" என்றார்.

சபாநாயகர் ஒரு கட்சியின் பிரதிநிதி அல்ல!

அதிமுகவில் இருந்து விலகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும், தற்போது அவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்; "சபாநாயகர் பதவி என்பது நடுநிலையானது. அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படக் கூடாது. சட்டமன்ற விதிகளையும், அதன் மரபு சார்ந்த நடைமுறைகளையும் சபாநாயகர் எக்காரணம் கொண்டும் வழுவக்கூடாது. சட்ட கோட்பாடுகளுக்கு உட்பட்டே நடவடிக்கைகள் அமைய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு: சமரசம் கூடாது!

சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்கொடுமைகள் குறித்துப் பேசிய அவர், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

"இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். காவல்துறை முழு வீச்சில் முடுக்கிவிடப்பட வேண்டும். 'சிங்கப்பெண்' திட்டத்தில் போலீஸார் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிந்தால், மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் காவலர்களை இந்த பிரிவில் நியமிக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

தமிழ் சமூகத்தின் அறிவில் சிறந்த மாணவர்களும், இளைஞர்களும் சாதி, மத பேதங்களை கடந்து, பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக களமிறங்க வேண்டும். கல்வி நிறுவனங்களும், அரசியல் இயக்கங்களும் இதற்கான உயரிய மனிதநேய விழுமியங்களை இளைய தலைமுறையினரிடம் உருவாக்க வேண்டும்" என்றார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு & மேகதாது அணை விவகாரம்

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த அவர், "இந்தியாவை கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுமையாகச் சுற்றி வளைத்துவிட்டன. தமிழ்நாட்டில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகள் நடந்தால், அதற்கு தமிழக அரசு எந்தச் சூழ்நிலையிலும் அனுமதி அளிக்கக் கூடாது" என எச்சரித்தார்.

மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில், முந்தைய அரசின் நிலைப்பாடே தொடரும் என தற்போதைய முதல்வர் அறிவித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகக் கூறினார்.

"மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் தன் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும். மேகதாது அணை கட்டப்படக் கூடாது. இதனை வெறும் அணை, நீர் என்று மட்டும் சுருக்கிப் பார்க்காமல், இரு மாநிலங்களின் உறவு மற்றும் மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரதானப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்" என்று மு.வீரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.

ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து

நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ராகவா லாரன்ஸ் ஒரு நல்ல மனிதர், சிறந்த நடிகர். ஆனால், அவர் அரசியலுக்கு வரும்போது மிகுந்த நிதானத்தோடு பேசிப் பழக வேண்டும். அரசியலில் நேர் எதிர் கருத்துக்கள் என்பது மிக இயல்பான ஒன்றுதான். ஒரு கட்சி வெற்றியடைவதும், மற்றொரு கட்சி தோல்வியடைவதும் ஜனநாயகத்தில் சகஜம். கருத்துக்கள் மோதிக் கொள்ளலாம், ஆனால் கண்ணியக் குறைவான கருத்துக்களை பொதுவெளியில் பதியச் செய்யக் கூடாது" என்று அறிவுறுத்தினார். சமீபத்திய ராகவா லாரன்ஸ் பேச்சு சர்ச்சை ஆன நிலையில், மு.வீரபாண்டியன் அட்வான்ஸ் செய்துள்ளார்.

இவ்விழாவில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 29 போராட்டம் குறித்த அறிவிப்பு தற்போதைய அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.