கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு: காரணம் என்ன?
நாகராஜ் June 16, 2026 03:14 PM

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான 'விண்ட்ஃபால்' (Windfall) வரியை திடீரென உயர்த்தி உள்ளது. அதே வேளையில் பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ. 13.5-லிருந்து ரூ. 14-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ. 9.5-லிருந்து ரூ. 12.5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ. 1.5 என்ற அளவில் மாற்றமின்றி தொடர்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மத்திய அரசு அவ்வப்போது இந்த வரியை மாற்றி வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் போர் தொடங்கியது. இதனை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியது.

இதனால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி, இந்தியாவின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து, வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்க்க முயல்கின்றன. இதனை தடுக்கவே மார்ச் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை அரசு இந்த வரியை மாற்றி அமைத்து வருகிறது.

நல்ல லாபம் கிடைப்பதால் தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில் மொத்த எரிபொருளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டால் இந்தியாவிற்குள் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்றுமதி வரியை உயர்த்தும்போது, நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு விற்பதை விட உள்நாட்டில் விற்பதே லாபகரமாகத் தோன்றும். இதன் மூலம் இந்தியாவின் எரிசக்தித் தேவைக்கு சிக்கல் ஏற்படாது.


அரசின் இந்த ஏற்றுமதி வரி உயர்வால் சாதாரண மக்களுக்கு தொடர்ந்து பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். உள்நாட்டுச் சந்தையில் விற்கப்படும் பெட்ரோல், டீசலுக்கான வரிகளில் எந்த மாற்றமும் இல்லை. எனவே பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் உள்நாட்டில் பெட்ரோல் , டீசல் மற்றும் விமான எரிபொருள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இவற்றுக்கான ஏற்றுமதி வரியை மாற்றி வருகிறது. இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. சென்னையை பொருத்தவரை இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 107. 87 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 99.6 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ சிஎன்ஜி 2 ரூபாய் விலை உயர்ந்து 97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.