நடிகர் பிரகாஷ்ராஜுக்குப் பிடிவாரண்ட் - பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!
Dinamaalai June 24, 2026 09:48 AM

ஒரே நேரத்தில் தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் சட்டவிரோதமாக வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பிரபல நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராகப் பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கறிஞர் திலீப் குமார் என்பவர் பெங்களூரு கூடுதல் தலைமை மெட்ரோபொலிட்டன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராகப் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகக் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பெயரைப் பதிவு செய்து, சட்டவிரோதமாக வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த முறைகேடு புகார் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இரண்டு முறை முறைப்படி சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

நீதிமன்றம் இரண்டு முறை சம்மன் அனுப்பியும், அதற்கு மதிப்பளிக்காத பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பெங்களூரு ஏசிஜேஎம் நீதிமன்ற நீதிபதி, இவ்வழக்கில் அலட்சியம் காட்டியதற்காக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்  பிறப்பித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த பிடிவாரண்ட் உத்தரவின்படி, ஹலசூரு கேட் காவல் நிலைய போலீசார் நடிகர் பிரகாஷ்ராஜைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிட்டு வருகின்றனர். அதேசமயம், சமூக ஊடகங்களில் உலா வரும் இந்த பிடிவாரண்ட் தொடர்பான சில செய்திகள் உண்மைக்கு மாறானவை என்றும், இதனைத் தனது வழக்கறிஞர்கள் மூலம் சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாகவும் பிரகாஷ்ராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.