இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சமீப காலங்களில் தன் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து பேசினார். நிகழ்ச்சிகளில் பேசுவதற்கே தனக்கு தயக்கமாக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வு. ஓ மை கடவுளே, டிராகன் போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய, இன்றைய ஜென் Z தலைமுறையால் இளமை இயக்குனர் என்று கொண்டாடப்படும் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். தனது துள்ளல் இசையால் உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருக்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். நடிகை சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அதிரடி சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருதுகளை வென்ற அன்பரிவ் மாஸ்டர்ஸ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார், எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ், கலை இயக்குனர் அண்ணாதுரை என இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்காற்றுகிறார்கள், மேலும் இணை தயாரிப்பாளராக டிஸ்னி இணைந்து தயாரிக்கிறார்.
இந்த நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த் " என்னை பேச அழைத்தாலே தயக்கமாக இருக்கிறது. நான் பேசினாலும் பிரச்சனை , பேசவில்லை என்றாலும் பிரச்சனை. எனக்கும் பிரச்சனை என்னை சுற்றியிருப்பவர்களுக்கும் பிரச்சனை. நான் ஏதாவது பேசினால் இப்போது வந்து சொல்லு என்கிறார்கள். அதுவே அமைதியாக இருந்தால் இவர் ஏன் பேசமாட்றார் வாயில கொழுக்கட்ட வச்சிருக்காரா என்கிறார்கள். ரொம்ப நாளைக்குப் பின் நான் ஒரு உண்மையை புரிந்துகொண்டே. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையாக இருக்கனும் " என்று ரஜினி பேசினார்.
தலைவர் 173 படத்தின் இயக்குநர் மாற்றம் குறித்து பேசிய ரஜினி ' அஸ்வத் மாரிமுத்து இந்த படத்திற்கு நான்காவது இயக்குநர். முதலில் ராம்குமார் கதை சொன்னார். அது சரிவரவில்லை. அதன்பிறகு சுந்தர் சி . அதன் பின் சிபி சக்கரவர்த்தி. சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை நன்றாக இருந்தாலும் அந்த கதை கொஞ்சம் ஜாக்கிரதையாக கையாள வேண்டிய கதை. அதற்கு இன்னும் கூடுதல் கால அவகாசம் வேண்டும். அதன் பின் அஸ்வத் மாரிமுத்துவை தேர்வு செய்தோம் " என ரஜினி தெரிவித்தார்.