பாக்யராஜ் வாக்கிங் சென்று திரும்பும்போது உயிரிழந்தது குறித்தும் அவரின் கடைசி நொடிகள் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. தன்னிகரே இல்லாத திரைக்கதை மன்னரான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் எனும் ஊரை சேர்ந்தவர் பாக்யராஜ். 1953ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி-அமராவதி எனும் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்ததார்.
பாக்யராஜின் மரணத்துக்கு சினிமா, அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய், பாக்யராஜின் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாக்யராஜின் திறமை குறித்தும் சிலாகித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடைசியாக குஷ்பு- சுந்தர்.சி. மகளின் திருமணத்தில் பாக்யராஜ் கலந்துகொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் பாக்யராஜ் உயிரிழந்தது எப்படி என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து நடிகை சுஹாசினி கூறும்போது, ‘’நேற்று கோவாவில் நடைபெற்ற குஷ்பு மகள் திருமணத்தில் திரைக்கதை மன்னர் பாக்யராஜ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். நாங்கள் எல்லோரும் அவருடன் கலந்துகொண்டோம். அவர் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். சிரித்துக்கொண்டே இருந்தார்.
இன்று காலை வாக்கிங் போய்விட்டு வந்தவர், திடீரென நெஞ்சு வலிக்கிறது என்று கூறி உள்ளார். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே உயிர் பிரிந்துவிட்டது. சிரித்துக்கொண்டே இருப்பவர், சிரித்துக்கொண்டே போய்விட்டார்’’ என்று சுஹாசினி தெரிவித்தார்.
’’இன்று என் வாழ்க்கையின் மிக துக்கமான நாள். அனைவரும் அவரின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என்று கண்ணீர்விட்டவாறே நடிகரும் பாக்யராஜின் உதவி இயக்குநராக இருந்தவருமான பார்த்திபன் தெரிவித்தார்.
இந்த நிலையில் காலஞ்சென்ற இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை (ஜூன் 28) மதியம் 1 மணிக்கு சென்னை, பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.