தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
கு. அஜ்மல்கான் July 04, 2026 05:14 PM

தவெகவில் விஜயபாஸ்கர்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவானது திமுகவிற்கு மட்டுமல்ல அதிமுகவிற்கும் பலத்த அடியாக விழுந்துள்ளது. தொடர் தோல்வியால் அதிமுக தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அக்கட்சி நிர்வாகிகள் கொத்து கொத்தாக தவெகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில், தவெகவில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரும், எம்எல்ஏவுமான விஜயபாஸ்கரும் தவெகவில் இணைந்தார். விரைவில் இடைத்தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெக அமைச்சரவையில் இடம்பெற விஜயபாஸ்கர் காய் நகர்த்தி வருகிறார். 

விஜயபாஸ்கருக்கு ஷாக்

இந்த நிலையில் விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுக்கும் வகையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், அதிமுக ஆட்சி காலத்தில் தடையை மீறி குட்கா விற்க அனுமதித்த அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்பட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர்.

12 வாரங்களில் வழக்கை முடிக்க கெடு

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை வரும் நாட்களில் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.