ஐரோப்பா கடுமையான வெப்பம் மற்றும் வரலாறு காணாத வெப்ப அலைகளுடன் போராடி வரும் நிலையில், ஈரான் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சலுகையை வழங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கினால், குளிரூட்டிகள் மற்றும் குளிர்விக்கும் உபகரணங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதை ஐரோப்பாவிற்கான ஒரு "நட்பான ஆலோசனை" என்று ஈரான் விவரித்துள்ளது.
துருக்கியில் உள்ள ஈரானிய தூதரகம், எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில், "ஐரோப்பாவில் நிலவும் முன்னெப்போதும் இல்லாத கடும் வெப்ப அலை மற்றும் போதுமான குளிரூட்டும் வசதிகள் இல்லாததால், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், எங்களிடம் ஒரு நட்பான பரிந்துரை உள்ளது. உங்கள் மக்களின் பாதுகாப்பிற்காக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தயவுசெய்து நீக்குங்கள். நாங்கள் பல்வேறு வகையான குளிரூட்டிகள் மற்றும் குளிர்விக்கும் உபகரணங்களை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராக உள்ளோம்." என்று கூறியுள்ளது.
Given the unprecedented heatwave across Europe and the tragic loss of innocent lives reportedly linked to the lack of adequate cooling systems, we have a friendly suggestion:
— Iran Embassy in Türkiye (@Iran_in_Turkiye) July 3, 2026
For the sake of protecting your own people, lift the sanctions on Iran. We are ready to export a wide… pic.twitter.com/A2M9i77czC
மேலும், பல ஆண்டுகளாக சர்வதேசத் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குளிரூட்டித் தொழில்துறையை உருவாக்கியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. "தடைகள் இருந்தபோதிலும், ஈரான் தனது சொந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குளிரூட்டிகளை வெற்றிகரமாக தயாரித்துள்ளது என்பதே ஒரு நல்ல செய்தி. எங்களிடம் நிபுணத்துவமும் உற்பத்தித் திறனும் உள்ளன. ஐரோப்பா தனக்குத்தானே உதவ விரும்பினால், நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்," என்று ஈரானிய தூதரகம் கூறியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வெப்ப அலையை ஐரோப்பா எதிர்கொண்டுள்ள நிலையில், ஈரானின் இந்த முன்மொழிவு வந்துள்ளது. ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட வெப்ப அலை, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இந்த கடுமையான வெப்பம், மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகள் மீதும் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தியது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலையின் போது, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் சேர்த்து சுமார் 3,700 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவை முதற்கட்ட புள்ளிவிவரங்கள் என்றும், இறுதி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் வெப்ப அலை மிகவும் கடுமையாக இருந்தது. அங்கு கூடுதலாக சுமார் 2,025 இறப்புகள் பதிவாகியுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடையேதான் இறப்பு அதிகரிப்பு அதிகமாக இருந்ததாக பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஸ்டெஃபானி ரிஸ்ட் கூறினார். ஜூன் 20 முதல் ஜூன் 28 வரை நீடித்த இந்த வெப்ப அலை, ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் கடுமையான வெப்ப நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.