​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
கிஷோர் July 04, 2026 08:44 PM

காஞ்சிபுரம் அருகே மது அருந்துவதில் ஏற்பட்ட தகாறில், நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அதேபோல், காரை பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணி. இவர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அதன் மூலம் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சந்தித்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மது வாங்குவதில் வந்த சண்டை

இந்தநிலையில், வழக்கம் போல காஞ்சிபுரம் அருகே உள்ள காரை ஊராட்சியில் அமைந்துள்ள சேமந்தாங்கள் ஏரிப் பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு வைத்து இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, யார் மது வாங்கித் தருவது மற்றும் யார் அதிக அளவு மது அருந்துவது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் இந்த வாக்குவாதம் முற்றவே, ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி மோதிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த அருள்மணி, மது போதையில் செய்வதறியாது திகைத்த மணிகண்டனை பலவந்தமாக இழுத்துச் சென்று, ஏரியில் இருந்த சேற்றில் அமுக்கியுள்ளார். மணிகண்டன் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் சேற்றில் மூச்சுத்திணறி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நண்பன் இறந்துவிட்டதை உணர்ந்த அருள்மணி, பயத்தில் உடனே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

இதற்கிடையில், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் ஏரிப் பகுதியில் மணிகண்டன் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாகப் பொன்னேரிக்கரை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதைத் தொடர்ந்து இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொன்னேரிக்கரை காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த அருள்மணியைக் கைது செய்தனர். தற்போது அவரிடம் காவல் நிலையத்தில் வைத்து கொலைக்கான பின்னணி குறித்து போலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனே நண்பனைக் கொலை செய்த இச்சம்பவம் காஞ்சிபுரம் வட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.