DVAC ARUN IPS: திமுகவிற்கு நெருக்கமான அருண் ஐபிஎஸ்க்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பதவி வழங்கப்பட்டது ஆரம்பத்திலேயே கடும் அதிர்வலைகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தனர். தேர்தலின் போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு, அவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக தவெக அளித்த புகாரும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால், தேர்தல் முடிந்ததும் ஆட்சி அமைத்த விஜய், லஞ்ச ஒழிப்புத்துறை எனும் முக்கியமான பிரிவிற்கான இயக்குனராக அருண் ஐபிஎஸ்-ஐ நியமித்தார். இது சொந்தக்கட்சிக்குள்ளாகவே சலசலைப்பை ஏற்படுத்தினாலும், கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தால் இந்த முடிவு எடுக்கப்படதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் நியமிக்கப்பட்ட இரண்டே மாதங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதவி பறிக்கப்பட்டு, காவல்துறை அகாடெமி இயக்குனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருணின் பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனமும் ஒன்றாகும். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குண்டாஸில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதுதொடர்பான விசாரணயில், ஊழல் தடுப்பு அமைப்பின் நம்பகத்தன்மையையும் நேர்மையையும் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அருணின் பதவி உயர்வு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தது.
அதன்படி, முன்னாள் தலைவர்களான சி.வி. நரசிம்மன் மற்றும் சி.எல். ராமகிருஷ்ணன் ஆகியோரை உதாரணமாகக் காட்டி, ”டி.வி.ஏ.சி இயக்குநர் அலுவலகம் பாரம்பரியமாக சிறந்த தகுதியும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளால் வகிக்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் பதவி வகித்த காலத்தில் அவர்களுக்கு எதிராக சிறு குற்றச்சாட்டு கூட முன்வைக்கப்படவில்லை. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டியது போல, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் பதவிக்கு மிகச் சிறந்த நற்பெயர் கொண்ட தொழில் வல்லுநர்கள் தலைமை தாங்க வேண்டும்" என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
தவெக அரசின் நிர்வாகம் தொடர்பான முக்கியமான உள்விவகார முடிவுகள் கசிந்ததிலும் அருணிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக எ.வ. வேலு வீடுகளில் நடந்த சோதனை மற்றும் அவரை விசாரணைக்கு உட்படுத்துவது ஆகியவற்றில், பல தகவல்கள் கசிந்ததகாவும் கூறப்படுகிறது. இதேபோன்று ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள கே.என். நேரு உள்ளிட்டோர் தொடர்பான முக்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இருந்து கசிந்ததாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதன் விளைவாக தான் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே தமிழ்நாடு காவல் பயிற்சி அகாடமிக்கு அருண் ஐபிஎஸ் மாற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக ஐஜி சி.மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். காவல்துறை மீது இருந்த ஆர்வத்தால், டிஎன்பிஎஸ்சி க்ரூப் 1 தேர்வெழுதி, 1997ஆம் ஆண்டு நேரடியாகத் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கினார். சிறப்பான பணிக்காக 2003-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும, 2006-ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார். கரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சென்னை மாநகர காவல்துறையின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களின் இணை ஆணையராக சட்டம்-ஒழுங்கைத் திறம்படக் கையாண்டவர். சேலம் சரக டிஐஜியாகவும் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.