தான் நடித்த படங்களின் பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கும் சென்று சேர்வதில் மகிழ்ச்சியடைவதாக நடிகர் பிரஷாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தியாகராஜனின் மகனாக அறியப்பட்டு தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரஷாந்த். தமிழ் சினிமாவில் 90களின் காலக்கட்டங்களில் குறிப்பாக விஜய், அஜித்துக்கு முன்னால் முன்னணி நடிகராக திகழ்ந்தார். பாலு மகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, மணி ரத்னம், ஷங்கர், பிரவீன் காந்தி,ராசு மதுரவன், வசந்த், சரண், ஏ. வெங்கடேஷ், ஹரி, சுசி கணேசன், சுந்தர்.சி. என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்தார். ரசிகர்களால் அன்புடன் “டாப் ஸ்டார்” என அடைமொழியிட்டு அழைக்கப்பட்டு வந்தார்.
2004ம் ஆண்டுக்குப் பிறகு பிரஷாந்த் நடித்த படங்கள் யாவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களும் சில காலங்கள் அவர் சினிமாவை விட்டு விலகும் சூழலுக்கு தள்ளியது. எனினும் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த பிரஷாந்த் வலுவான வெற்றிக்காக காத்திருக்கிறார். பல தரப்பட்ட கதையம்சம் கொண்ட படங்களிலும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்படியான நிலையில் 2024ம் ஆண்டு விஜயுடன் அவர் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தலைமுறையினர் இடையே பிரஷாந்த் பற்றிய அறிமுகத்தைக் கொண்டு சேர்த்தது.
இந்த நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரஷாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற ஹை ரப்பா பாடல் ரீல்ஸ் மூலம் ட்ரெண்டானது. பலரும் இப்பாடலுக்கு நடனமாடி பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு ஏன் பிரஷாந்த் நடுவராக பணியாற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுவாசிகாவுடன் ஹை ரப்பா பாடலுக்கு நடனமாடினார்.
தொடர்ந்து நடிகை சிம்ரனுடன் ஜோடி படத்தில் இடம் பெற்ற “காதல் கடிதம்”, சினேகாவுடன் ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற “அன்பே அன்பே” பாடலுக்கும் நடனமாடினார். இது மிகப்பெரிய அளவில் வைரலானது. இன்றைய தலைமுறையினர் பிரஷாந்த் யார் என்பதை அறிந்து வியந்து வருகின்றனர்.
இதனிடையே ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகர் பிரசாந்த், “காலத்தால் அழிக்க முடியாத இந்த பாடல்கள் ஜென்ஸி மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறையினர் இடையே பிரபலமாவதைக் கண்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இது சமூக ஊடகங்களில் ஒரு ட்ரெண்டாக மாறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம், பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஷங்கர் ஆகியோர் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, நாங்கள் இன்னும் அதைப் பற்றி யோசிக்கவில்லை. எனினும் அந்த நிகழ்வுக்கான திட்டத்தை நான் தொடங்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார்.