அதிர்ச்சி... டிடர்ஜென்ட் பவுடர் கலந்து தயாரித்த கலப்பட செயற்கை பால் !
Dinamaalai July 14, 2026 04:48 PM

 

மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் மாவட்டம் பூம் தாலுகா பகுதியில் போலீசாரும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினரும் இணைந்து தீவிரச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 2,30,470 கிலோ குறைந்த தரம் கொண்ட பால் பவுடர் விற்பனைப் பதிவேடுகள் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வைத்து சுமார் 23,04,070 லிட்டர் செயற்கைப் பால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கலப்படம் செய்பவர்கள் 100 லிட்டர் தூய்மையான பாலில் 10 லிட்டர் செயற்கைப் பாலை எளிய முறையில் கலந்து விநியோகம் செய்துள்ளனர். இந்த 10 சதவீத விகிதத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2.3 கோடி லிட்டருக்கும் அதிகமான நச்சுப் பால் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். செயற்கைப் பாலை அசல் பால் போலக் காட்டுவதற்காக அவர்கள் டிடர்ஜென்ட் பவுடர், பாம் ஆயில் மற்றும் ரசாயன பவுடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய 7 நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நச்சுப் பாலைத் தொடர்ந்து குடிப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் முற்றிலும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தங்களின் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இத்தகைய குற்றங்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்க வழிவகை உள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.