மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளங்கலை மறு தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மற்றும் புதிய அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
தேசியத் தேர்வுகள் முகமை முன்னதாக மே 3ஆம் தேதி நடத்திய தேர்வில் முறைகேடு நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 21ஆம் தேதி அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து ஜூன் இறுதி வாரத்தில் தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 10 ஆயிரம் ஆட்சேபனைகள் வந்தன. அவை மதிப்பீடு செய்யப்பட்டு, இறுதி விடைக் குறிப்பு வெளியானது.
இந்த நீட் மறுதேர்வின் முடிவுகள் மற்றும் ஒட்டுமொத்த மாணவர்களுக்கான திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் ஆகியவை இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன.
இந்தத் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மற்றும் இறுதிப் பட்டியல் வெளியான பின்னரே, மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மற்றும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே, மாணவர்கள் தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு (2027) முதல் கணினி முறையில் நீட் தேர்வு, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.