ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்ற இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை இந்தியா இன்று வன்மையாகக் கண்டித்தது. இந்த தாக்குதல்களில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல்கள் மாலுமிகளை இலக்காகக் கொண்ட வன்முறைச் செயல்கள் என்றும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச நீர்வழிகளில் தடையின்றியும், பாதுகாப்பாகவும் செல்வதை தடுப்பதாகவும் இந்தியா கூறியது. இது தொடர்பாக, புது டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணைத் தூதரை வெளியுறவு அமைச்சகம் வரவழைத்ததைத் தொடர்ந்து, இந்த அறிக்கை வெளியானது.
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்ற இரண்டு கப்பல்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஒரு இந்திய மாலுமி கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர். ஐக்கிய அரபு அமீரகக் கொடியை ஏந்திய எம்.டி. அல் பஹியா மற்றும் எம்.டி. மொம்பாசா ஆகிய கப்பல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இரு கப்பல்களிலும் 30 இந்தியர்கள் உட்பட மொத்தம் 46 பணியாளர்கள் இருந்தனர். மேற்கு ஆசியாவில் மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் விரோதப் போக்குகள் குறித்தும் வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, வன்முறையை உடனடியாக நிறுத்தவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தைக் கடைபிடிக்கவும் இந்தியா அழைப்பு விடுத்தது.
சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, நீர்வழிகள் வழியாக தடையற்ற போக்குவரத்தையும் வர்த்தகத்தையும் கூடிய விரைவில் மீண்டும் தொடங்குவதற்காக, அப்பகுதியில் உள்ள வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, 'எம்டி அல் பஹியா' கப்பலில் இருந்த 12 இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார். 'எம்டி மொம்பாசா' கப்பலில் இருந்த 18 இந்தியர்களில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட இந்திய பணியாளர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், புது டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணைத் தூதர் இன்று காலை வரவழைக்கப்பட்டு, இந்தத் தாக்குதல்கள் குறித்து அவரிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகவும் இந்தியா கூறியுள்ளது.