Education Minister Pralhad Joshi Qualification: புதிய மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரகலாத் ஜோஷி, கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஆவார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கல்வி அமைப்பின் கூடுதல் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, பிரகலாத் ஜோஷி நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் துறையை கவனித்து வந்தார். முன்னதாக நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு விநியோகம், நாடாளுமன்ற விவகாரங்கள் போன்ற அரசாங்கத்தின் மிகவும் சவாலான சில துறைகளையும் நிர்வகித்துள்ளார். இந்நிலையில் புதிய கல்வி அமைச்சரின் கல்வித்தகுதி குறித்த விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
ஹுப்பள்ளியைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரியான பிரகலாத் ஜோஷி, தற்போது கல்வி அமைச்சராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த துறையில் உள்ள சவால்கள் மிகவும் சிரமமானவை என்பதோடு, இங்கு எடுக்கப்படும் முடிவுகள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடியது ஆகும். போட்டித் தேர்வுகள் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது முதல், தேசிய கல்விக் கொள்கையை (NEP) முன்னெடுத்துச் செல்வது மற்றும் உயர்கல்வி சீர்திருத்தங்களைக் கண்காணிப்பது வரை, புதிய அமைச்சரின் முன்னால் உள்ள சவால்கள் நிர்வாகத்தைத் தாண்டி வெகுதூரம் மிகப்பெரிய இலக்காக நீள்கிறது.
அமைச்சரின் அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற சுயவிவரத்தின்படி, ஜோஷி ஹுப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தார்வாடில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கடசித்தேஷ்வர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ.) பெற்றார். அவர் 1983ம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கர்நாடகப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அவரது கல்வி நிறுவனம், வட கர்நாடகாவின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். 1949-ல் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், பல தசாப்தங்களாக ஏராளமான அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப் பிரமுகர்களை உருவாக்கியுள்ளது. தனது மாணவர் பருவத்தில், அவர் பொதுப் பிரச்சினைகள், சமூக சேவை மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பொறியியல், சட்டம் அல்லது மேலாண்மை போன்ற துறைகளில் தொழில்முறைப் பட்டங்களைப் பெற்ற பல அண்மைக்கால கல்வி அமைச்சர்களைப் போலல்லாமல், ஜோஷியின் கல்விப் பின்னணி மானுடவியலில் அமைந்துள்ளது.
ஜோஷியின் கல்விப் பின்னணி என்பது இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது அரசியல் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடினமான துறைகளைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளார். இணையதள தரவுகளின்படி, தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு ஜோஷி தொழில்முனைவு மற்றும் சமூக முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருந்தார். இந்த விவரங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அடித்தள மேம்பாட்டில் அவருக்கு இருந்த ஆரம்பகால ஆர்வத்தை வெளிக்காட்டுகிறது. அதேநேரம், வழக்கமான அமைச்சரவை மாற்றமாக இல்லாமல் பெரும் போராட்டத்தின் விளைவாக, ராஜினாமா செய்யப்பட்ட ஒருவரது இடத்திற்கு பிரகலாத் ஜோஷி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது பணிகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1962-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்த ஜோஷி, தார்வாட் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அன்று முதல் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் அவர் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு, அம்மாநிலத்திலிருந்து பாஜகவின் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகத் திகழ்கிறார். பல ஆண்டுகளாக, அவர் அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அரசியல் ஒருங்கிணைப்பும் கொள்கைச் செயலாக்கமும் தேவைப்படும் அமைச்சகங்கள் அவரிடம் அடிக்கடி ஒப்படைக்கப்படுகின்றன.