கர்நாடகா மாநிலத்தில் 3 தமிழர்கள் வனத்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமார் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட ஹனூர் தாலுகாவில் தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அதிகாலையில் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இருமாநில உறவில் கடும் பிரச்னை நிலவி வரும் நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வனத்துறையினர், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசும்போது, உரிமம் இல்லாத துப்பாக்கிகளுடன் வனப்பகுதிக்குள் மான்களை வேட்டையாட சென்றதால் தற்காப்புக்காக வனத்துறை அதிகாரிகள் சுட்டதாக தெரிவித்தார். அதேசமயம் இறந்தவர்கள் குடும்பத்தினர் பேசும்போது காணாமல் போன தங்களது இரண்டு பசு மாடுகளைத் தேடி விவசாயிகளான அவர்கள் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவரின் பதிவில், இந்த சம்பவத்தில் கர்நாடகா வனத்துறை அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல. இது ஒரு படுகொலை என தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக நேர்மையான, உயர்மட்டக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விஜயின் கண்டன அறிக்கைக்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்தார். கர்நாடகாவின் உள்மாநில விவகாரத்தில் மிழக முதல்வர் விஜய் ஏன் தலையிட வேண்டும்? என்று கேள்வியெழுப்பினார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அறிக்கை வந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் விஜய் தெரிவித்த கருத்துக்கு கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பெயர் குறிப்பிடாமல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர்,எந்த மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. நான் தமிழக விவகாரத்தில் தலையிடவில்லை. எங்கள் மாநிலத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். முதல்வர் விஜய்யின் கருத்துக்கு நான் பதிலளிக்க மாட்டேன். தமிழகத் தலைவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும். நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம் என கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.