தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
குலசேகரன் முனிரத்தினம் August 19, 2026 09:44 AM

TN Govt MTC Job: போக்குவரத்து ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தும் உரிமத்தை உத்தரபிரதேச நிறுவனத்திற்கு வழங்குவது, உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் என பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச ஊழியர்கள்?

போதிய வேலைவாய்ப்பின்மை காரணமாக ஏராளமான இளைஞர்கள் தமிழ்நாட்டில் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிதிநிலைமை காரணம் காட்டி அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. செலவுகளை குறைப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். குறைந்தபட்சம் அந்த பிரிவிலாவது ஒரு வேலையை பெற்றுவிட வேண்டும் என பலரும் கடுமையாக முயன்று வருகின்றனர். இந்நிலையில் தான், பல்வேறு தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும்,  பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC), பேருந்து நடத்துனர்களை அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தும் உரிமத்தை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கி தமிழ்நாடு அரசு பணி ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது.

2,00 ஒப்பந்த நடத்துனர்கள்.!

மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஆரம்பகட்ட 11 மாத காலத்திற்கு ஆறு மண்டலங்களில் தினமும் ஆயிரத்து 797 நடத்துனர்கள் வரை பணியில் ஈடுபடுவார்கள். ஆகஸ்ட் 7 அன்று வழங்கப்பட்ட பணி ஆணையின்படி, MTC நிர்வாகம் ஒரு நபருக்கு மாதந்தோறும் அடிப்படை ஊதியமாக 27 ஆயிரத்து 679 ரூபாயை அந்த நிறுவனத்திற்குச் செலுத்தும். முழுமையான பணியமர்த்தல் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் வெளியான ஒப்பந்தம்..!

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அரசு, நடத்துனர்களை அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்துவதற்கான இந்த டெண்டரை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. தொடர்ந்து மார்ச் மாதம் ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டன. விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த பிறகு, MTC நிர்வாகமானத்பு ரூ. 64.56 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை

தொழிற்சங்கங்கள் அதிருப்தி:

உத்தரபிரதேச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பாக, தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பின் (சிஐடியு) பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், “முந்தைய திமுக அரசின் வேலைகளை வெளி நிறுவனங்களுக்கு வழங்கும் கொள்கையை, தவெக அரசு மாற்றும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் தவெக அரசு ஒரு படி மேலே சென்று, உத்தரப் பிரதேச நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை ஒப்படைத்துள்ளது. தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், உத்தரப் பிரதேச நிறுவனத்தை அனுமதிக்கும் இந்த நடவடிக்கை மிகவும் மோசமானது. சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகப் பேசுவது, அதே சமயம் அதற்கு எதிராகச் செயல்படுவது என முந்தைய திமுக அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டிருந்தது. இதே நிலைப்பாட்டை தவெக அரசும் பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது. அரசு அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த ஒப்பந்த ஊழியர்கள் வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கு கிடைக்க மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.