தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தோல்வியை சந்தித்தது. இதில் திமுக தலைவரான ஸ்டாலினும் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தலில் மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட விஎஸ் பாபு 82,997 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று தேர்தல் ஆணையத்தால் கடந்த மாதம் கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக திமுக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. உரிய வகையில் இயந்திரங்கள் செயல்படவில்லையெனவும் கூறப்பட்டது. இதனையடுத்து திமுக தலைவரும், கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்று விட்டன எனவும், ஆறு வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களான விவிபேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த சரிபார்ப்பு நடைமுறை தொடர்பாக புகார் செய்வது, வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முறைகேடுகள் நடந்துள்ளதால் கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும் எனவும், தவெக எம்.எல் ஏ வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.