நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் படம் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரபல மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள படம் டாக்ஸிக். இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தில் இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி,ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் என ஐந்து ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படம் பல முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
டாக்ஸிக் படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நேரடியாகப் படமாக்கப்பட்டு, மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் போன்றவை பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டது. அதனால் முன்பதிவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.
இந்த நிலையில் டாக்ஸிக் படம் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டதால் அதிகாலை முதலே யஷ் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாட்டில் இன்று அரசு விடுமுறை என்பதால் காலை 9 மணிக்கு முதல் காட்சியைக் காண பலரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த நிலையில் தியேட்டரில் படத்தின் காட்சிகளை வழக்கம்போல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே ரசிகர்களுக்கு டாக்ஸிக் படக்குழு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதில், “நடிகர் யஷ் வெளியிட்டுள்ள பதிவில், டாக்ஸிக் என்பது எங்களுக்கு வெறும் ஒரு திரைப்படம் மட்டுமல்ல. அது, பல ஆண்டுகளாக நாங்கள் எங்கள் இதயத்தை ஊற்றி உருவாக்கிய ஒரு உலகம். அதன் ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு தேர்வையும் நாங்கள் கவனமாக வடிவமைத்தோம். இந்தப் படத்தின் தயாரிப்பிலும் வெளியீட்டிலும் ஈடுபட்ட ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநர், கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் ஒரே ஒரு விருப்பம்தான் உள்ளது.
அதாவது நீங்கள் அனைவரும் ஒரு சமூகமாக திரையரங்குகளில் பெரிய திரையில் ஒன்றாக அமர்ந்து இந்த நம்பமுடியாத அனுபவத்தைப் பெற வேண்டும். முன்பதிவுகள் மூலம் இந்தப் படத்திற்கு நீங்கள் ஏற்கனவே காட்டியுள்ள அளவற்ற அன்பு, உற்சாகம் மற்றும் அமோக ஆதரவிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. எங்கள் பயணம் முழுவதும் நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவிற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.
இந்தத் தருணத்தில், உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறோம்.இந்தத் திரைப்படம் உங்களுக்காக உருவாக்கப்பட்டதைப் போலவே பார்வையாளர்களுக்கும் விரியட்டும். திரையரங்குகளில் படம் பார்க்கும்போது, காட்சிகளைப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவிடாதீர்கள். படத்தின் முக்கியக் கதைக்களங்களையும் திருப்பங்களையும் வெளிப்படுத்தி, மற்றவர்களின் பார்க்கும் அனுபவத்தைக் கெடுக்காதீர்கள்.உங்களுக்குப் பிறகு வரும் பார்வையாளர்களும் 'டாக்ஸிக்' உலகத்தை அதே ஆர்வத்துடன் அனுபவிக்கட்டும்” என தெரிவித்துள்ளார். இருந்தாலும் சிலர் பட காட்சிகளை சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.