Minister Nirmal Kumar: திமுக மக்கள் பக்கம் திரும்பவேண்டுமானால் அந்த கட்சியில் இருந்து ஸ்டாலின் குடும்பம் வெளியேற வேண்டும் என, தவெக அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தவெக சாதனை விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிர்மல்குமார், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மதுரைக்கு கொண்டு வந்துள்ள திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசுகையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். அந்த வகையில், “அறிவாலயத்தில் புதியதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்டவர்களை மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருந்து நீக்கவுள்ளனராம். ஆனால், மக்கள் ஏன் திமுகவை புறக்கணித்தார்கள் என அவர்களுக்கு இன்னும் புரியவில்லை. ஏன் திமுகவிற்கு ஓட்டுபோடவில்லை எனவும் புரிந்துகொள்ளவில்லை. இளைஞர்களை பதவிக்கு கொண்டு வந்தால் மக்கள் ஓட்டுபோட்டுவிடுவார்கள் என நினைத்துக்கொண்டு, 70 வயதுக்கு மேற்பட்டவர்களை வெளியேற்றி விட்டு புதியதாக இளைஞர்களை பதவியில் நியமிக்க திட்டமிடுகின்றனர்.
முதலில் ஒரு விஷயத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எல்லாம் மன்னர்கள் உங்கள் குடும்பம் மட்டும் உட்கார்ந்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒவ்வொரு வருடமும் பல ஊழல்களை செய்து கோபாலபுரம் குடும்பம் தொடங்கி இன்று ஸ்டாலின் குடும்பமாகி அடுத்த தலைமுறை வரை வந்துள்ளது. இந்த ஊர், நாடு எல்லாம் உங்களுக்கானது என எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதா? ஒரு குடும்பம் மட்டும் சம்பாதித்து மூன்று நான்கு தலைமுறையாக மக்களை ஏமாற்றிக்கொண்டு இருந்தீர்கள். அதற்காக தான் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள். மக்கள் உங்கள் குடும்பத்தை புறக்கணிக்கிறார்கள். மக்களிடம் நன்மதிப்பை பெறவேண்டுமானால், கோபாலபுரம் குடும்பம் ஸ்டாலின், உதயநிதி போன்றோர் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும்.
கட்சிக்குள் முதலில் ஜனநாயகத்தை கொண்டு வாருங்கள். அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். இந்த கட்சி மக்களுக்கு ஏதேனும் செய்யும் என மக்களுக்கு தோன்றும். நீங்கள் குடும்பமாக உட்கார்ந்துகொண்டு மாப்பிள்ளை, பையன், மாப்பிள்ளையின் நண்பர்கள், பையனின் நண்பர்கள் 10 பேர், 20 பேர் உட்கார்ந்துகொண்டு தமிழ்நாட்டையே ஆட்சி செய்ய விரும்ப உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.
ரத்தீஷ் எல்லாம் வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடிவிட்டான். வழக்கு போட்டதும் துபாய்க்கு தப்பித்துவிட்டார். ஊரை விட்டே ஓடியாச்சு. மாப்பிள்ளை, பையனுக்கு அரசியலும் தெரியாது. கட்சியும் தெரியாது, மக்களும் தெரியாது. அவர்களுடன் திரிந்துகொண்டு இருந்த நபர்கள் எல்லாம் 5 வருடங்கள் ஆட்சியை நடத்தியுள்ளார்கள். மக்களுக்கு என்ன தேவை என எங்களுக்கு தெரிந்தது. அதனால் தான் பாதாள சாக்கடை திட்டத்தை 3 மாதங்களில் கொண்டு வந்துள்ளோம். என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து செயல்படுகிறோம்.
இது எதுவுமே தெரியாத மாப்பிள்ளை மற்றும் பையனுடன் இருந்த நண்பர்கள் ஆட்சியை நடத்தியுள்ளார்கள். இதை எல்லாம் பார்த்து தான் மக்கள் உங்களை புறக்கணித்துள்ளார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு 70 வயதான தலைவர்களை வெளியேற்றுவதால் மட்டும் ஓட்டுபோட்டுவிடுவார்களா? முதலில் திமுகவில் உங்கள் குடும்பத்தின் ஆதிக்கத்தை வெளியேற்றுங்கள். அண்ணா சிரமப்பட்டு உருவாக்கிய கட்சியை உங்கள் குடும்பம் இன்று ஊரையே கொள்ளையடித்துள்ளது. எனவே நீங்கள் அந்த கட்சியில் இருந்து வெளியேறினால் தான் திமுக மக்கள் பக்கம் திரும்பும்” என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார்.