Minister Nirmalkumar: உரிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், கே.என். நேரு மீது பழிவாங்கும் நடவடிக்கையில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், “ எந்த பழிவாங்கலும் யாரையும் செய்ய முடியாது. சும்மா பொய்யான வழக்குகள் எல்லாம் போடவும் முடியாது. ஆவணங்கள் அடிப்படையில் ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்படும். கடந்த ஆட்சியில் பணம் வாங்கிக் கொண்டு அரசு வேலைகளை ஒதுக்கியதாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதுவும் ஆவணங்களோடு சேர்த்து வழங்கி இருந்தனர். ஊழல் மற்று முறைகேடுகளை கூட்டு சதியாக நிகழ்த்துவதாக இரண்டு மூன்று முறை அமலாக்கத்துறையே நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்பித்துள்ளது. அதனடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக கருதுகிறேன். இதை DVAC தான் விளக்க வேண்டும்.
இனி சம்மன் எல்லாம் அனுப்பப்படும். ஊழல் செய்து இருந்தால், தவறு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. ஆதாரங்கள் இருக்கும்போது எப்படி தப்பிக்க முடியும்? எனவே பொய் வழக்குகளை போட வேண்டிய அவசியம் கிடையாது. எதில் ஆதாரங்கள் இருக்கிறதோ, சட்டப்பூர்வ வாய்ப்புகள் இருக்கிறதோ அதில் தான் நடவடிக்கை எடுக்க முடியும். மின்சாரத்துறையில் கூட 45 துறைகளில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக குற்றம்சாட்டுகள் எழுந்துள்ளன. அவையேல்லம என்ன மாதிரியான முறைகேடுகள், எந்த காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் என்பதை நீதிமன்றத்தில் விளக்க வேண்டி உள்ளது அல்லவா. எனவே சரியான ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்ட மக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபனமானால் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது” என அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து மானியக்கோரிக்கையின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு திங்கட்கிழமை பதிலளிப்பேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், நாளை அவருடைய உரை எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தமிழக மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அந்த பதில் இருக்கும். இந்த மாதிரியான ஒரு அரசு, மக்களுக்காக உழைக்கும் இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் கடந்த 70 வருடங்களில் இல்லை. எனவே மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் முதலமைச்சரின் பதிலுரை இருக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட்கள் இல்லை என தெரிவித்துள்ளார்களே என கேட்டபோது, “கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரையில் கட்சியின் அனைத்து தரப்பிலும் பேசி தான் முடிவு செய்வார்கள். எங்களது அரசுக்கு இக்கட்டான காலகட்டத்தில் ஆதரவு அளித்துள்ளார்கள். இடையில் சின்ன சங்கடங்கள் இருந்தன. அதில் 0அரசுக்கே தெரியாமல் தாசில்தார் அனுப்பிய சுற்றறிக்கை அடங்கும். அதற்கான வருத்தத்தை நாங்கள் தெரிவித்தோம். கண்டிப்பாக அவர்கள் அனைவருடனும் இணைந்து மக்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அத்தகைய மாற்றம் 50 ஆண்டுகளுக்கு தொடரும்” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.