இறப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரும். இதை யாராலும் யூகிக்க முடியாது. அப்படி post office மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் அவருடைய கணக்கில் இருக்கும் பணம் என்னவாகும்?, பணத்தை பெறுவதற்கு என்னென்ன விதிமுறைகள் இருக்கிறது?, யார் பணத்தை கேட்கலாம்?, என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதை monthly income scheme என்றும் கூறுவார்கள். இந்த திட்டம் 2019-ஆம் ஆண்டில் அறிமுகமானது. அரசு வழங்கும் சிறுசேமிப்பு திட்டங்களில் இந்த திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இது ஒரு மொத்த முதலீட்டு திட்டம் ஆகும். தற்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் தனிநபர்கள் ரூ.9 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். அதுவே இருவர் சேர்ந்து முதலீடு செய்யும் போது ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம்.

உதாரணமாக கணவன், மனைவி இணைந்து கூட ரூ.15 லட்சம் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். இதற்கு முன்னர் வரை இந்த திட்டத்தில் நாமினியை நியமிப்பதற்கும், நாமினியை மாற்றுவதற்கும் 50 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. ஆனால் 2025 ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் விதிகளை அரசு திருத்தி அறிவித்தது. அதன்படி தற்போது இலவசமாகவே நாமினியை நியமித்துக் கொள்ளலாம். மேலும் போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் தனிநபர் இறந்துவிட்டால் அவருடைய நாமினி பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்து டெபாசிட் தொகையை பெறலாம்.
அதற்கு பூர்த்தி செய்யப்பட்ட படிவம், இறப்புச் சான்றிதழ், பாஸ்புக், ஆதார் விபரங்கள், கேஒய்சி ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நாமினியாக இருந்தால் பிரச்சனை இல்லை. இரண்டு, மூன்று நாமினிகள் இருந்தால் பிரித்து பணம் வழங்கப்படும். இறக்கும் முன்பு யார், எவ்வளவு தொகையைப் பெற வேண்டும் என்று கணக்கு வைத்திருந்தவர் குறிப்பிட்டிருந்தால் அதன்படி பிரித்து வழங்கப்படும். அப்படி இல்லை என்றால் அவர் நியமித்த நாமினிகளுக்கு சமமான பங்குகள் வழங்கப்படும்.
நாமினியை நியமிக்காமல் கணக்கு வைத்திருந்தவர் இறந்துவிட்டால் அவருடைய சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் பணத்தை பெறலாம். ரூ.5 லட்சம் வரையிலான தொகையை பெறுவதற்கு சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் அஃபிடவிட், இழப்பீட்டு பத்திரம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதுவே ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற விரும்பினால் அதற்கு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட வாரிசு சான்றிதழ் தேவைப்படும். மேலும் சர்ச்சைக்குரிய கோரிக்கைகளாக இருந்தால் கட்டாயம் நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் பணம் ஒப்படைக்கப்படும். எனவே இது போன்ற சட்ட சிக்கலை தவிர்ப்பதற்கு கணக்கு வைத்திருக்கும் போதே நாமினியை நியமிப்பது அவசியமாகும். இதனால் எந்த வித பிரச்சனையும் இன்றி உங்களுடைய முதலீடு சரியான நபரை சென்றடையும்.