Flight Accident: நொறுங்கிய வாகனங்கள்.. ஷாக்கான ஊழியர்கள்.. ஓடுபாதையில் நடந்த விமான விபத்து.. வீடியோ இதோ!
பேச்சி ஆவுடையப்பன் September 07, 2026 12:44 PM

 அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 

இந்த சம்பவம் செப்டம்பர் 6ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. அமேசான்  நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று அங்கு தரையிறங்கியுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விமான நிலையத்தின் 30வது ஓடுபாதையைத் தாண்டிச் சென்றதால் விபத்தை சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போயிங் 767-300 ரக சரக்கு விமானமான புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் உள்ள லூயிஸ் முனோஸ் மரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த விமானம் வட கரோலினாவைத் தளமாகக் கொண்ட 21 ஏர் என்ற சரக்கு விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகள் விமானமாக செயல்பட்டு வந்த போயிங் 767-300 விமானம் 2015ம் ஆண்டுக்குப் பின் சரக்கு விமானமாக மாற்றப்பட்டது. இந்த விபத்தால் நேற்று பகல் நேரத்தில் மட்டும் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 250 விமானங்கள் தாமதமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்பதை அறிந்து நாங்கள் மிகுந்த துயரம் அடைந்துள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் இந்தத் துயரமான இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள, நாங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். மேலும் எந்தவொரு விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோவில் ஏர் விமானம் இரண்டு கனரக லாரிகளுக்கு அருகே சாலையோரத்தில் மோதி நிற்பது போன்றும் அதிலிருந்து கரும்புகை எழுவதை காண முடிகிறது. இந்த விபத்தில் விமானியும் துணை விமானியும் விமானத்தின் காக்பிட்டிற்குள் சிக்கிக்கொண்டதாகவும், சிலர் வாகனங்களில் மாட்டிக்கொண்டதாகவும் மியாமி-டேட் மீட்பு மற்றும் தீயணைப்புத் துறைத் தலைவர் ரே ஜடல்லா கூறினார்.  காயமடைந்தவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், மற்ற இருவர் லேசான காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 அவசரகாலப் பணியாளர்கள் இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.