கோடி கோடியாக பணம்.. யார் அந்த 2 சார்.? IUML எம்எல்ஏ பேச்சுக்கு சிஎம் விஜய் பதில் என்ன.? RB உதயகுமார் கேள்வி
கு. அஜ்மல்கான் September 07, 2026 01:14 PM

பணம், அமைச்சர் பதவி-IUML எம்எல்ஏ பேச்சு

அமைச்சர் பதவி தருகிறோம், கோடிக்கோடியாக பணம் தருகிறோம் என பேரம் பேசியதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கேள்வி எழுப்பி அதிமுக நிர்வாகியான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு  முதல்வர் விஜய் பதிலுரை இன்று இருக்கும் நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மாமூல் வசூலிக்கும் போட்டியிலே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தவெக நிர்வாகியான ரவுடி கண்ணன் நேற்று ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். 

ரகசியத்தை உடைத்த IUML எம்எல்ஏ பேச்சு

ஆனால் அதைவிட  அதிர்ச்சியாக தமிழ்நாடு சட்டமன்றத்திலே தவெக தனி பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டிய அந்த ரகசியத்தை தேங்காய் உடைப்பது போல் போட்டு உடைத்துள்ளார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சையது பாரூக் பாஷா அவர்கள். திருவண்ணாமலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகி ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர் உள்ளத்தில் இருப்பதை ஒளியும் மறைவின்றி உள்ளதை உள்ளபடியே பேசியிருக்கிறார். 

 என்னையும் ஷாஜகானையும் சந்தித்து கோடி கோடியாக எடுத்து வந்து தருகிறோம், கையெழுத்து போடுங்கள் என்றார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி வேண்டுமா, போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வேண்டுமா என்று இரண்டு பேர் எங்களிடம் கேட்டார்கள். என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியானால் அந்த இரண்டு சார் யார் என்று இந்த மண்டே வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிற முதல்வர் மண்டேக்காக காத்திருக்கிற மக்களுக்கு மண்டையை கழுவாமல் சட்டசபையிலே பதில் அளிப்பாரா, 

தமிழக மக்களுக்கு விளக்கம் சொல்லுவாரா.?

இது எந்த குதிரை பேரத்தின் கீழே வருகிறது, என்பதை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கி சொல்வாரா, ஆனால் எது எப்படியோ தூய்மையான ஆட்சி தருவதாக உறுதி அளித்த அரியணையில் அமர்ந்திருக்கிற முதல்வர் விஜய்  தவெக ஆட்சியை தூய்மையான வழியிலே பெரும்பான்மை பெற்றுள்ளதா அல்லது பெரும்பான்மைக்காக எந்த சிறுபிள்ளை தனத்தையும் தவெக அரசு நடத்திக் காட்டி இருப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாமா, ஆகவே இன்றைக்கு பிரதமர் நிலைக்கு தன்னை விளம்பரப்படுத்தி வருகின்ற விஜய் இது குறித்து இந்த நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவாரா,

 விலைவாசி உயர்வைப் பற்றி ,சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதைப் பற்றி, போதை பொருள் நடமாட்டத்தைப் பற்றி, பெண்கள் பாதுகாப்பைப் பற்றி அதையெல்லாம் உண்மை நிலவரத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டிருக்கிற நடவடிக்கைகளைப் பற்றி விளக்கமாக சொல்லுவாரா, இந்த மண்டே மக்களின் முக்கியத்துவம் கவனத்தைப் பெறுமா, அல்லது எப்போதும் போல தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட விஜய்  வசீகர வசனமும் கவர்ச்சியான பஞ்ச் டயலாகும் அதிரடியாக தமிழ்நாடு சட்டமன்றத்திலே பேசி அதிரடி, பஞ்ச் பேசி, மக்களை பஞ்சர் ஆக்கிவிடுவாரா? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.