முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
அருண் சின்னதுரை September 07, 2026 09:14 PM

2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 30.09.2026 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தின் சார்பாக 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 30.09.2026 வரை மாவட்ட விளையாட்டரங்கம் உட்பட மொத்தம் 10 இடங்களில் நடைபெற உள்ளது.

பரிசு என்ன

அனைத்துப் பிரிவுகளிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதற்பரிசாக ரூ.3,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000-மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000-மும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவர்களுக்கு அரசின் உயரிய பரிசுத் தொகையான முதல் பரிசாக ரூ.1,00,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.75,000-மும், மூன்றாம் பரிசாக ரூ.50,000-மும், குழுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதற்பரிசாக ரூ.75,000-மும், இரண்டாம் பரிசாக ரூ.50,000-மும், மூன்றாம் பரிசாக ரூ.25,000-மும், தனித்தனியாக வழங்கப்படவுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியர்கள், தலைமையாசிரியர்கள் அல்லது கல்லுாரி முதல்வர் அவர்களால் வழங்கப்பட்ட உறுதி சான்றிதழ் (Bonafide Certificate) (அ) அடையாள அட்டை (Id Card) கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். அரசுப்பணியாளர்கள் பிரிவில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது அடையாள அட்டையினை (Id Card) தவறாது சமர்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்

மேலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்துப் பிரிவினரும் தங்களது புகைப்பட நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கிப்புத்தகத்தின் முதல் பக்க நகலினை தவறாது சமர்பிக்க வேண்டும். சிலம்பம், சதுரங்கம், கேரம், இறகுபந்து, ஸ்கேட்டிங், யோகா, கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், மேசைபந்து ஆகிய விளையாட்டு போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் அதற்கான விளையாட்டு உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்த மாணவ, மாணவிகள் மட்டுமே விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இயலும். பள்ளியிலிருந்து வரும் மாணவ, மாணவிகளை அதற்கென பொறுப்பு ஆசிரியர்களை நியமித்து அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவ, மாணவியர்கள் காலை மற்றும்  மதிய உணவுகளை தாங்களே கொண்டு வரவேண்டும். அனைத்துப் போட்டிகளும் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள்  நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://tncmtrophy.sdat.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.