ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்ட்வி வாய்ப்பு!
க.சே.ரமணி பிரபா தேவி September 08, 2026 08:14 PM

ஐஐடி சென்னை பள்ளி இணைப்புத் திட்டத்தின் அக்டோபர் 2026 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவ மாணவிகள் உயர்கல்வி, பணித்தேர்வு சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, புதிய தொழில்நுட்பத் துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு தொழில் வழிகாட்டல் இடைவெளியைச் சரிசெய்யவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மொழி ஒருபோதும் தடையல்ல

கற்றலுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் இப்பாடப் பிரிவுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வழங்கப்படுகின்றன. மேலும் 7 மாநில மொழிகளில் விரைவில் பாடத் தொகுப்புகளைக் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐஐடி சென்னையின் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (Centre for Outreach and Digital Education - CODE) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இத்திட்டம், தற்போது முதல்முறையாக 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் பல்வேறு தொழிற்துறைகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ளவும், 11,12-ம் வகுப்புகளில் தங்களுக்குப் பொருத்தமான பாடப்பிரிவுகளைத் தன்னம்பிக்கையுடன் தேர்வுசெய்யவும் இத்தகைய ஆரம்பக்கட்ட அறிமுகம் உதவுகிறது.

9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்பிரிவுகள் தொடங்கி உள்ளன. வளர்ந்து வரும் புதிய துறைகள் சார்ந்த ஆரம்பக்கட்ட அனுபவத்தை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்க விரும்பும் பள்ளி முதல்வர்களும் நிர்வாகிகளும், https://code.iitm.ac.in/schoolconnect/ இணையதளம் வழியாக ஐஐடி மெட்ராஸ் பள்ளி இணைப்புத்’ திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

இத்திட்டம் தொடங்கப்பட்டபின், வெளிநாடுகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உட்பட 4,900-க்கும் அதிகமான பள்ளிகளுடன் இணைந்து, 1.75 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயனளித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை நாடு முழுவதும் உள்ள 25,000 பள்ளிகளுக்கு விரிவுபடுத்த ஐஐடி சென்னையின் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.