Basics of Share Market 6 : பங்குச்சந்தையில் 'நீண்ட கால' முதலீட்டின் அவசியம் என்ன?!
Vikatan October 19, 2024 09:48 PM

நான், நீங்கள் என பெரும்பாலான சாமனிய மக்கள் பங்குச்சந்தைக்கு வருவதே 'முதலீடு' செய்யத்தான். பங்குச்சந்தையில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? என்பதற்கு முன்பு பார்த்த அத்தியாயத்தில் இருந்து 'அதிக வட்டி விகிதத்திற்கும், நமது சேமிப்பு பணவீக்கத்திற்கு நிகர் ஆவதற்கும்' என்று தெரிந்திருப்போம்.

முதலீட்டிலேயே 'நீண்ட கால முதலீடு', 'குறுகிய கால முதலீடு' என்று இரண்டு வகை முதலீடுகள் இருக்கின்றன. குறுகிய கால முதலீட்டிற்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்பதுதான் பெரும்பாலான பொருளாதார நிபுணர்களின் கூற்று. ஆம், பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, நிறுவனங்களின் பங்கு ஒரு நாள் ஏறும், ஒரு நாள் இறங்கும். அப்போது குறுகிய கால தேவைக்கு இதில் முதலீடு செய்வது ரிஸ்க் தான்.

நீண்ட கால முதலீட்டிற்கு பெஸ்ட் சாய்ஸ் 'பங்குச்சந்தை'

அதனால், நீண்ட கால முதலீட்டிற்கு பெஸ்ட் சாய்ஸ் 'பங்குச்சந்தை'. பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டை பற்றி இனி பார்ப்போம்...

நீண்ட கால முதலீடு என்றால் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கி நீண்ட காலத்திற்கு விற்காமல் வைத்திருப்பது ஆகும். உதாரணத்திற்கு, ராஜின் துணிக்கடை பங்கை இன்று வாங்குகிறோம் என்றால், இன்றிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது 5+ ஆண்டுகளுக்கும் மேல் அந்த பங்கை விற்காமல் வைத்திருப்பது ஆகும். விற்காமலே வைத்திருப்பது என்றால் கடைசி வரை விற்காமலே வைத்திருப்பது என்பதில்லை. இப்போது உங்களுக்கு 30 வயது என்றால் நீண்ட கால முதலீட்டை 50 வயதிற்கு பிறகான ஓய்வுகாலத்திற்காக சேர்த்து வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது இன்னும் 20 ஆண்டுக்காலத்திற்கு, இந்த பங்கை விற்க வேண்டிய அவசியம் இருக்காது. இதைத்தான் நீண்ட கால முதலீடு என்று எடுத்துக்கொள்கிறோம். இப்படி உங்கள் கோலுக்கு ஏற்ற மாதிரி முதலீடு செய்யுங்கள்.

ஏன் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும்போது ரிஸ்க் குறைவு? மீண்டும் ராஜ் உதாரணத்திற்கு வருவோம். எந்தவொரு வியாபாரியும் தன் நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனால் 20 ஆண்டுக்காலத்தில் ராஜ் இன்றைய நிறுவனத்தை எத்தனை பெரிதாக்கி இருப்பார்... எத்தனை கிளைகள் தொடங்கியிருப்பார்... எத்தனை புதிய தொழிலில் இறங்கி இருப்பார்? - இதை வைத்து அவரது பங்கு எந்தளவிற்கு வளர்ந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவர் சறுக்கலையே சந்தித்திருக்கமாட்டார் என்றில்லை... சந்தித்திருந்தாலும் மீண்டு வந்திருப்பார். அதனால் நமது பங்கின் விலை நீண்ட காலத்தில் நிச்சயம் உயர்ந்திருக்கும்.

பணம் பெருகுவது மற்றும் டிவிடெண்ட் கிடைப்பது!

நீண்ட கால முதலீடு மூலம் நமக்கு இரண்டு பலன்கள் உண்டு - பணம் பெருகுவது மற்றும் டிவிடெண்ட் கிடைப்பது.

இன்று ரூ.1 போட்டால் 20 வருட காலத்தில் அது எத்தனை ரூபாயாக வேண்டுமானாலும் பெருகியிருக்கலாம். இது பணம் பெருகுவது.

டிவிடெண்ட் என்பது நிறுவனங்கள் லாபத்தில் பங்கு தருவது ஆகும். அதாவது ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கி, அந்த நிறுவனத்தின் பார்ட்னராக இருந்தால், சில நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவார்கள். இதற்கு டிவிடெண்ட் என்று பெயர். உதாரணத்திற்கு, SAIL, COAL India, ONGC போன்ற நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன.

திங்கட்கிழமை: பங்குச்சந்தையில் 'டிரேடிங்' என்றால் என்ன?!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.