குழாயடி சண்டையில் பெண் உயிரிழப்பு! சங்கரன்கோவிலில் பரபரப்பு
Top Tamil News October 22, 2024 10:48 PM

சங்கரன்கோவில் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள  சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மனைவி தவசுகண்ணு, (55) அதே பகுதியைச் சேர்ந்த சண்முகச்சாமி என்பவரது மனைவி அன்னதுரைச்சி (60), இருவரும் எதிரெதிர் வீடு என்பதால் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் மற்றும் பயன்படுத்திய தண்ணீர் செல்வது குறித்தும் அடிக்கடி வாக்குவாதமும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைப்போல இன்றும் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தவசுகண்ணு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததார். தவசுகண்ணுவின் உறவினர்கள் உடனடியாக குற்றவாளியை கைது செய்ய கோரிக்கை வைத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இருக்கும் தவசுகண்ணு உடலை பெற மறுத்தனர். பனவடலிசத்திரம் காவல் துறையினர் அண்ணதுரைச்சி (60)யை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.