குரூப் 1 தேர்வு முறைகேடு.. ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலைக்கழகங்கள் மீது பாய்ந்தது வழக்கு!
Dinamaalai October 22, 2024 11:48 PM

மதுரையைச் சேர்ந்த சகித்ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 நடத்திய குரூப் 1 தேர்வில் தொலைதூரக் கல்வியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும் உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே, அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,'' என மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு விசாரித்தது.

அப்போது, “அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இருந்து விவரங்கள் வழங்கப்படாததால் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அடிப்படை விவரங்கள் கூட கடந்த 2 ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களால் இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே, இந்த வழக்கில் இந்த 4 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களை தானாக முன்வந்து சேர்க்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என்றார்.

மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், இந்த உத்தரவின் அடிப்படையில் தேவையான ஆவணங்களை பெற லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஒருவரை நியமிக்கவும் உத்தரவிட்டனர். விசாரணைக்கு தேவையான தகவல்களை சேகரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு கால அவகாசம் அளிக்க விரும்பவில்லை என்றும், குற்றவாளிகளை பாதுகாக்க பாடுபடுபவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, விசாரணையின் வரம்பை விரிவுபடுத்தவும், ஆவணங்களை மறைத்து குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாத்தவர்களை வழக்கில் சேர்க்கவும் விசாரணை குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆவணங்களை வழங்க பல்கலைக்கழகங்கள் தாமதம் செய்தால், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி ஆவணங்களை சேகரிக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.