திமுகவின் அயலக அணியின் சமூக வலைதள பக்கத்தில், இந்திய வரைபடத்திலிருந்து இந்தியாவின் சில பகுதிகளை நீக்கி பதிவிடப்பட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், முழுமையான இந்திய வரைபடத்துடன் மீண்டும் பதிவிடப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் பாடியவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்தில் ஒரு வரியை மறந்து பாடாமல் விட்டதற்கு வானத்திற்கும், பூமிக்கும் எகிறிக் குதித்து, அதற்கு துளியும் சம்பந்தமில்லாத ஆளுநரை விமர்சித்து, பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே,
இந்திய வரைபடத்திலிருந்து இந்தியாவின் சில பகுதிகளை திட்டமிட்டு வெட்டி பதிவிட்ட திமுகவின் அயலக அணியின் அராஜக, பிரிவினைவாத செயலுக்கு நீங்கள் இருவரும் பொறுப்பேற்று உங்கள் பதவியை ராஜினாமா செய்வீர்களா?
இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கத்தை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் தாரை வார்க்க துடிக்கும் திமுக வின் எண்ணமும் , செயலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரிவினைவாத எண்ணத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.