உஷார்... மழைக்காலங்களில் இந்த உணவு வகைகளைத் தவிர்த்திடுங்க... எவை எல்லாம் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்?
Dinamaalai October 24, 2024 01:48 PM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. மழைக்காலம் என்றாலே குழந்தைகள் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் பதற்றமடைவார்கள். இந்த மழை காலத்தில் இவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமே என எதை சாப்பிடக்கூடாது என மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விடுவர். இந்நிலையில் மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் குறித்தும் இந்தப் பதிவில் காணலாம்.   பருவநிலைக்கு ஏற்றபடி  நம் உணவு முறையில் சிறிய மாற்றங்கள் கொண்டு வந்தால் பல்வேறு நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.  

மழைக்காலம் பெரும்பாலானோர்க்கு கொண்டாட்டமாக இருந்தாலும் ஆஸ்துமா சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு மழைக்காலம் சவாலாகவே இருக்கும். அதே போல்  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் எந்த பருவநிலையாக இருந்தாலும் உணவில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்க முடியும் என மருத்துவர்கள் உறுதி அளிக்கின்றனர். 

மழைக்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் :

மழைக்காலத்தில் பழங்கள் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக  ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் வகை பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தான் வைட்டமின் சி சத்து ஆன்டி ஆக்சிடென்ட் நீர்ச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.   சிட்ரஸ் பழ ஒவ்வாமை (அலர்ஜி) உள்ளவர்கள் அதனை தவிர்த்துவிடுவது உத்தமம்.  

மாதுளம் பழத்தை சேர்த்துக் கொள்வதால் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் உடலில் வீக்கம், அலர்ஜி இவைகளை போக்குகிறது.  மழைக்காலத்தில் பப்பாளி எடுத்துக் கொள்வதால் அதில் உள்ள பப்பைன் என்ற வேதிப்பொருள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் வாயு பிரச்சனையை குணப்படுத்துகிறது.

பலரும் மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் இருக்கும். தயிரில் ப்ரோ பயோடிக் பாக்டீரியா இருப்பதால் மழைக்காலத்தில் எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது. அத்துடன்  சுண்டைக்காய், பாகற்காய் , இஞ்சி பூண்டு இவைகளை அதிக அளவில்  மழைக்காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  மழைக்காலத்தில் காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொள்வதை காட்டிலும், அதனை வேக வைத்து சூப்பாக எடுத்துக் கொள்வது சிறந்தது.  

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

மழைக்காலத்தில் சாலையோர கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிர்த்து விடுவது நல்லது .  இந்த மழைக்கால சூழலில் காரணமாக தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகம். இதனால் உணவு அலர்ஜி ஏற்பட்டு செரிமான கோளாறுகளும் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், குளிர்பானங்கள் மற்றும் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தொண்டை வலி, கரகரப்பு, சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்கின்றனர்  மருத்துவர்கள்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.