திருவேற்காடு பெருமாளகரம் அடுத்த புளூட்டோ தெருவை சேர்ந்தவர் மோகன் (53). இவர் தனது வீட்டில் சில தெருநாய்களை வளர்த்து வந்துள்ளார். அவர்களுக்குத் தேவையான உணவைத் தவறாமல் தினமும் அளித்து வருகிறார். பாலாஜி வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்புநாய் வெளியே வந்தபோது, வீட்டின் அருகே மோகன் வளர்க்கும் தெரு நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி இரவு உணவில் எலி மருந்தை கலந்து தெருநாய்களுக்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட இரண்டு நாய்கள் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷம் கொடுத்து கொல்லப்பட்ட 2 நாய்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தெருநாய்களை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்த்து வந்த உரிமையாளர், அக்கம்பக்கத்தினர் விஷம் வைத்து கொன்ற சம்பவத்தால் பெரும் தவித்துள்ளார். இதையடுத்து, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தினர்.