நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!
Dinamaalai February 03, 2025 02:48 AM

 தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள்  புறக்கணித்துள்ளன. தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி ஆகியோர் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தினமும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  

இந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகின்றனர்.  இந்நிலையில் நாளை  பிப்ரவரி 3ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.