கள்ளக்குறிச்சி: `முட்டைப் பொரியலில் விஷம் வச்சுட்டேன்' - காதலை கைவிட மறுத்த மகள்; தாய் செய்த கொடூரம்
Vikatan February 03, 2025 11:48 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அதே பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.

இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாற, இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேச ஆரம்பித்திருக்கின்றனர். சாந்தி தினமும் சாய்குமாருடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசிக் கொண்டும், வாட்ஸ்-அப் சாட்டிலும் இருந்ததால், சாந்தியின் அம்மா அதுகுறித்துக் கேட்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம்

அப்போது அந்த நபரைக் காதலிப்பதாக சாந்தி கூற, அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அந்தக் காதலை விட்டுவிடுமாறும், படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருக்கிறார் அவரின் அம்மா. ஆனால் காதலை விட முடியாது என்று கூறிய சாந்தி, அவருடன் தினமும் பேசி வந்திருக்கிறார். அதில் கோபமடைந்த சாந்தியின் அம்மா, சாந்தியைக் கொலை செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி நேற்று முன் தினம் சாந்திக்குப் பிடித்தமான முட்டைப் பொரியல் செய்த சாந்தியின் அம்மா, அதில் எலி மருந்தைக் கலந்து மகளுக்குக் கொடுத்திருக்கிறார். சாந்தியும் அதை முழுமையாகச் சாப்பிட்டு தன் அம்மாவுடன் எப்போதும்போல சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது என்ன காரணத்தாலோ, `நீ சாப்பிட்ட முட்டைப் பொரியலில் எலி மருந்து கலந்துட்டேன்’ என்று மகள் சாந்தியிடம் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சாந்தி, `என்னம்மா இப்படி பண்ணிட்டியே. நான் உன் பொண்ணுதானம்மா…’ என்று கேட்டவாறே மயங்கி விழுந்திருக்கிறார்.

அதையடுத்து சாந்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சாந்தியிடம் பெற்ற புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருக்கும் சங்கராபுரம் போலீஸார், தாயைக் கைது செய்திருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.