தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை பிப்ரவரி 6ம் தேதி வியாழக்கிழமை நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நாளை மறுநாள் பிப்ரவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற விழாவில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மார்க்கெட் கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதனையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சார்பில் வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு சம்பந்தமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக முதல்வரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று பிப்ரவரி 4ம் தேதி புதன்கிழமை முதல் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வரையிலான 3 நாட்கள் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் நெல்லை மாநகர பகுதியிலும் இன்று காலை 6 மணியில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.