இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு துவக்கம்...6,00,000 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்!
Dinamaalai February 07, 2025 12:48 PM

இன்று பிப்ரவரி 7ம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ் வழி பள்ளிக்கல்வித் திட்டத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு துவங்குகிறது.

இன்று தொடங்கவிருக்கும் செய்முறைத் தேர்வு வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொதுத் தேர்வு எழுத இருக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 7 தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறவுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 5000க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த செய்முறை தேர்வில் கலந்து கொள்ள  இருக்கின்றனர்.


இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வுத் துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி, பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியும் இன்றி பிப்ரவரி 14ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.

ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சலுகை அறிவித்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மேலும், தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  எனவே தலைமை ஆசிரியர்கள்  கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.