பெங்களூருவில் உள்ள எலஹங்கா ஏர்போர்ஸ் ஸ்டேஷனில் வரும் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 5 நாட்கள் ”ஏரோ இந்தியா” ஷோ நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, விண்வெளித் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன. முதல்முறை 1996ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு படிப்படியாக பிரபலமாகி ஆசியாவின் மிகப்பெரிய ஏர்ஷோக்களில் ஒன்றாக மாறிவிட்டது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
ஏரோ இந்தியா நிகழ்வில் சர்வதேச அளவில் பாதுகாப்புத் துறை சார்ந்த அதிகாரிகள், தொழில்துறையினர், வான்வெளி சார்ந்த ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த ஏரோ இந்தியா நிகழ்வில் வான வேடிக்கை காட்டும் வகையில் விமானங்கள் அணிவகுத்து செல்லும். சாகசங்கள் புரியும்.
புதிய போர் விமானங்கள், விமானத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கலாம். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு குழுக்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் 15 நாடுகளை சேர்ந்த 800 நிறுவனங்கள் தங்களின் படைப்புகளை பார்வைக்கு வைக்கவுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் இருந்து டசால்ட், சஃப்ரான், தால்ஸ் ஆகிய நிறுவனங்கள், அமெரிக்காவில் இருந்து போயிங், லாக்ஹீட் மார்டின், ஆர்.டி.எக்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பாதுகாப்பு துறை சார்ந்த பிரம்மாண்டங்களை காட்சிப்படுத்த உள்ளனர். 2025 ஏரோ இந்தியா ஷோவில் ஒர்க்ஷாப், செமினார், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் உள்ளிட்டவை நடத்தப்படும். இதற்காக ataeroindia.gov.in என்ற இணையத்தில் சென்று பதிவு செய்து கொண்டு பாஸ் வாங்க வேண்டும்.