`கனவுக்கே பயந்தவங்க தான், பின்னாடி..!' டைரக்டர் உடன் காதல், கல்யாணம் - நடிகை பல்லவி பர்சனல்ஸ்
Vikatan February 08, 2025 01:48 AM

தேவனின் கோவில் மூடிய நேரம்

நான் என்ன கேட்பேன் தெய்வமே

இன்று என் ஜீவன் தேயுதே

என் மனம் ஏனோ சாயுதே...

- 1986-ல் வெளிவந்த 'அறுவடை நாள்' படத்துல வர்ற இந்தப்பாட்டும் சரி, பாட்டு முழுக்க விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துன நடிகை பல்லவியின் முகமும் சரி, இன்னிக்கு வரைக்கும் எவர்க்ரீன்தான். பல்லவியோடது பேசும் கண்கள். அதுல கொஞ்சம் கூடுதலான மையும் குழந்தைமையும் இருக்கும்.

Actress Pallavi ராணி பத்ரா டு பல்லவி!

பல்லவியோட நேட்டிவ் பஞ்சாப். ஆனா, பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையிலதான். சொந்தப்பேரு ராணி பத்ரா. கூடப்பிறந்தது ஓர் அண்ணன், ஒரு தம்பி. பல்லவி நல்ல டான்சர். அதனால, ஸ்கூல் டேஸ்ல எந்த கலை நிகழ்ச்சிகளையும் மிஸ் பண்ண மாட்டாராம். மும்பையில மாடலிங் செஞ்சுக்கிட்டிருந்த ராணி பத்ராவுக்கு இந்தி சினிமா வாய்ப்பு வந்திருக்கு. அந்தப்படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே, தெலுங்குல 'ப்ரீத்தி'ங்கிற பேர்ல 'இல்லாலு பிரியராலு'ங்கிற படத்துல ஷோபன் பாபுவுக்கு ஜோடியா நடிச்சிட்டாங்க. அந்தப்படம் அங்க செம ஹிட். இந்தப்படம் தமிழ்ல 'பூ பூவா பூத்திருக்கு'ன்னு ரீ மேக் செய்யப்பட்டுச்சு.

தெலுங்குல பல்லவி நடிச்ச கேரக்டர்ல தமிழ்ல அமலாவும், ஷோபன் பாபு நடிச்ச ரோல்ல பிரபுவும் நடிச்சிருந்தாங்க. அடுத்து, 'நேத்ரா பல்லவி'ங்கிற கன்னடப்படத்துல 'பல்லவி'ங்கிற பேர்ல அறிமுகமாக, கன்னட சினிமாவோட ஃபேவரிட் ஹீரோயினார். கன்னடத்துல மளமளன்னு படங்கள் புக் ஆக, பிஸி ஹீரோயினா வலம் வர்ற நேரத்துலதான் 'அறுவடை நாள்' படத்துல நடிக்கிறதுக்காக ஒரு புதுமுகத்தை தேடிக்கிட்டிருக்கிறது பல்லவிக்கு தெரிய வருது. ஸோ, அந்தப் படத்துல வாய்ப்புத்தேடி மும்பையில இருந்து சென்னைக்கு வந்து இறங்குறாங்க.

கன்னடத்துல ஃபேமஸ் ஹீரோயின்!

''பல்லவி கிட்ட சில சீன்ஸ் சொல்லி நடிச்சிக்காட்ட சொன்னோம். அய்யய்யோ... எக்ஸ்ட்ரா ஆர்டினரி பெர்ஃபார்மென்ஸ். அசந்து போயிட்டோம். உடனே பல்லவிதான் எங்க படத்தோட ஹீரோயின்னு ஓகே பண்ணிட்டோம். அதுக்கப்புறம்தான் அவங்க கன்னடத்துல ரொம்ப ஃபேமஸான ஹீரோயின்கிறதே எங்களுக்குத் தெரிஞ்சது'' - பல்லவி பத்தி, 'அறுவடை நாள்' படத்தோட டைரக்டர் ஜி.எம்.குமார் எக்ஸைட்டிங்கா சொன்ன தகவல் இது. பின்னாள்ல இவர்தான் பல்லவியோட கணவரானார்ங்கிறது தனி காதல் கதை.

Actress Pallavi `நான் பேசுற மொழி யாருக்குமே புரியாது!'

பல்லவி சென்னையில செட்டிலாகுறதுக்கு முன்னாடி, ஷூட்டிங் இருக்கிற நாள்கள்ல மட்டும் சென்னைக்கு வந்துட்டு மறுபடியும் மும்பைக்கு போயிடுவாராம். ஒரு இன்டர்வியூவுலகூட ''நான் சென்னைக்கு வந்த புதுசுல நான் பறக்கிற மாதிரி கனவு அடிக்கடி வரும். அந்த கனவுல நான் பேசுற மொழி யாருக்குமே புரியாது. நான் அழுதுகிட்டே சைகையில மத்தவங்க கிட்ட பேச முயற்சி செய்வேன். ஆனா, எல்லாரும் என்னை ஊமைன்னு பாவமா பார்ப்பாங்க. நான் டாக்டர்கிட்ட போனா, அவர் ஒரு கத்தியை எடுத்து என் கழுத்தை அறுக்க வருவாரு''ன்னு சொல்லியிருப்பாங்க. அந்தளவுக்கு புது ஊர், புது மொழின்னு கனவுலகூட பயந்த பல்லவிதான், பின்னாள்ல தமிழ் சினிமாவுல ஒரு பெரிய ரவுண்டு வந்தாங்க.

ஹோம்லி, மார்டன்னு ரெண்டுமே பொருந்தும்!

விஜயகாந்தோட 'தர்ம தேவதை', ராம்கியோட 'தங்கச்சி', அப்புறம் ரஜினியோட 'வேலைக்காரன்' படத்துல சரத்பாபு ஜோடியா பல்லவி நடிச்சிருப்பார். சரத்பாபுவை கொலை செய்ய வந்துட்டு அவரையே லவ் பண்ற கேரக்டர்ல அளவோ சோகம் காட்டி ஸ்கோர் செஞ்சிருப்பாங்க பல்லவி. கமலோட 'சூரசம்ஹாரம்' படத்துல போதைப்பொருளுக்கு அடிமையான பெண்ணா துணிச்சலா டான்ஸ் பண்ணியிருப்பாங்க. கார்த்திக் நடிச்ச 'தாயே நீயே துணை' படத்துல முதல் ராத்திரி அன்னிக்கு பல்லவிக்கு கண்ணுத்தெரியாம போயிடும். திடீர்னு கண்ணு தெரியாம போன அதிர்ச்சி, அழுகை, அதை கணவனுக்குத் தெரியாம மறைக்கிறதுன்னு கொஞ்சம்கூட ஓவர் ஆக்டிங் இல்லாம நடிச்சிருப்பாங்க பல்லவி.

அர்ஜுனனுடன் 'தாயம் ஒண்ணு' படத்துல திருடி கேரக்டர். அதுலேயும் பெஸ்ட்டை கொடுத்திருப்பாங்க. முரளியுடன் சிறையில் சில ராகங்கள், வெற்றி மாலை, ராமராஜனுடன் பார்த்தால் பசு, அன்புக்கட்டளை, பாண்டியராஜுடன் ஊரை தெரிஞ்சுக்கிட்டேன், புருஷன் எனக்கு அரசன், எஸ்.வி. சேகருடன் தங்கமணி ரங்கமணி, மணந்தால் மகாதேவன், சகாதேவன் மகாதேவன், விசுவுடன் வேடிக்கை என் வாடிக்கை என்று சொல்லிக்கிட்டே போகலாம். 'உழைப்பாளி' படத்துல வர்ற ஒரு மைனா மைனா குருவி பாட்டுல, அதிரடி டான்ஸும் செஞ்சிருப்பாங்க. ஹோம்லி, மார்டன்னு ரெண்டுமே பல்லவிக்கு நல்லா பொருந்தும்.

அருணாச்சலம் படத்தில் 'மாத்தாடு மாத்தாடு மல்லிகே'

நாயகி, ரெண்டாவது நாயகி, ரெண்டு மூணு நாயகிகள்ல ஒருத்தர்னு வலம் வந்துக்கிட்டிருந்த பல்லவி, பிறகு குணச்சித்திர கேரக்டர்களும் செய்ய ஆரம்பிச்சார். ரஜினியோட அருணாச்சலம் படத்துல வர்ற 'மாத்தாடு மாத்தாடு மல்லிகே' பாட்டோட முதல் வரியை எடுத்துக் கொடுக்கிறதே பல்லவிதான். 'உன்னை நினைத்து' திரைப்படத்துல நடிகை லைலாவின் அம்மாவா, கிட்டத்தட்ட ஒரு நெகடிவ் ரோலும் செஞ்சிருப்பார். இதுக்கப்புறம், அக்ஷயா, கங்கா யமுனா சரஸ்வதி, ஆனந்த பவன், சூலம், மை டியர் பூதம், மனைவின்னு சின்னத்திரை சீரியல்கள்லேயும் நடிக்க ஆரம்பிச்சார்.

எனக்கு வாழ்க்கையில 'த்ரில்' வேணும்!

ஹீரோயின்கள்ல பல்லவி கொஞ்சம் வித்தியாசமானவங்க. நடிப்பு, சம்பளம்னு கடந்துப்போயிட்டிருந்த பல ஹீரோயின்களுக்கு மத்தியில, தமிழ் சினிமா ஃபீல்டுல என்ட்ரியான சில வருடங்கள்லேயே 'உருவம்' என்கிற த்ரில்லர் மூவியை தயாரிச்சிருக்காங்க. இந்தப் படத்தை டைரக்ட் செஞ்சதும் 'அறுவடை நாள்' டைரக்ட் செஞ்ச ஜி.எம்.குமார் தான். இவர்தான் 'அவன் இவன்' படத்துல ஹைனஸா நடிச்சவர்.

"எனக்கு வியாபாரத்துல எப்பவுமே ஈடுபாடு உண்டு. ஏற்கெனவே ஓட்டல் நடத்திப் பார்த்தேன். அது சரியாக வரலை. இப்போ, படத் தயாரிப்புல ஈடுபட்டிருக்கேன். 'படம் எடுக்காதீங்க ... ரொம்ப ரிஸ்க்'னு நிறைய பேர் எனக்கு அட்வைஸ் செஞ்சாங்க. எனக்கு வாழ்க்கையில 'த்ரில்' வேணும். அதுக்காகத்தான் இந்த ரிஸ்க்''னு பேட்டி ஒண்ணுல சொல்லியிருப்பாங்க பல்லவி.

அவங்க சொன்ன மாதிரியே, அந்தப்படம் அவங்க கரியர்ல எடுத்த பெரிய ரிஸ்க் தான். அதனால, பெரியளவுல பல்லவி நஷ்டமாகியிருக்காங்க. கூடவே கடனும் நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. தான் காதலிச்ச டைரக்டர் ஜி.வி.குமாரோட படங்கள் எல்லாம் சென்சார் மாட்டிக்க, தான் தயாரிச்ச உருவமும் நஷ்டத்தை ஏற்படுத்த தடுமாறி நின்னிருக்காங்க பல்லவி. ஆனா, இத்தனை பிரச்னைகளுக்கு நடுவுலேயும் ஜி.வி.குமாரை விட்டு விலகாம நின்னிருக்காங்க பல்லவி. அந்த நேரத்துலதான் எனக்கு பல்லவி மேல காதல் வந்துச்சுன்னு பேட்டி ஒண்ணுல ஜி.வி.குமாரே சொல்லியிருக்கார்.

அருணாச்சலம் படத்தில் இரண்டாவது வாழ்க்கை...

அப்படிப்பட்ட பல்லவியே, பின்னாள்ல சூழ்நிலை காரணமா தன் கணவரைப் பிரிஞ்சிருக்காங்க. கடன் தொல்லை, அதையெல்லாம் சரிசெய்ய தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல், மகனோட இறப்புன்னு வாழ்க்கையோட பல சுழல்கள்ல சிக்கின பல்லவி, இப்போ சான்ஃபிரான்சிஸ்கோவுல தன்னோட இரண்டாவது வாழ்க்கையை நல்லபடியா வாழ்ந்திட்டிருக்காங்க. மொழி தெரியாத ஊருக்கு வந்து, நடிச்சு, பேர் வாங்கின பல்லவி எங்கிருந்தாலும் நிம்மதியாக வாழட்டும்!

(நாயகிகள் வருவார்கள்)

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.