தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 05ம் தேதி நடைபெற்றது. அதிமுக, பாஜக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வருகிறார். தபால் வாக்குகள் எண்ணிக்கையின்படி ஈரோடு கிழக்கில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. திமுக வேட்பாளர் சந்திரகுமார் 782 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 140 வாக்குகளை பெற்றுள்ளார்.