ராமநாதபுரம் மாவட்டம் மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேட் அயூப்கான்(56) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சேட் அயூப்கான் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் குழந்தைகள் நல அலுவலர்கள், வட்டார கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளிக்கு சென்று மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அடுத்த கட்ட விசாரணை நடைபெற இருந்தது.
இந்நிலையில் இரவு நேரத்தில் அறைக்கு தூங்க சென்ற சேட் அயூப்கான் நீண்ட நேரமாகியும் காலை எழுந்து வரவில்லை. இதனால் அவரது மனைவி அறைக்கு சென்று பார்த்தார். அப்போது தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைமை ஆசிரியரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.