சாம்பியன்ஸ் டிராபியின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் மோதியிருந்தன. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 352 டார்கெட்டை ஆஸ்திரேலிய அணி மிக நேர்த்தியாக சேஸ் செய்து முடித்திருக்கிறது. முக்கியமான வீரர்கள் அணியில் இல்லாத போதும் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியை வென்றிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை உண்டாக்கியிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்துதான் டாஸை வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என எந்த பெரிய பௌலரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லை. அதனால் ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் போதாமையோடே இருந்தது. இருந்தாலும் சீரான இடைவேளையில் விக்கெட் எடுத்துக் கொண்டே இருந்தனர். ஓப்பனிங் இறங்கிய பில் சால்ட்டை ஆரம்பத்திலேயே வெளியேற்றினார் வார்சூயிஸ். இன்னொரு ஓப்பனரான பென் டக்கெட்தான் இங்கிலாந்தின் விடிவெள்ளியாக இருந்தார். ஆஸ்திரேலிய அணி என்னவெல்லாமோ செய்து பார்த்தும் எதற்கும் அசையவில்லை.
ஸ்மித் விதவிதமாக பீல்ட் செட் செய்தார். ஆனாலும் டக்கெட்டை அசைக்க முடியவில்லை, நின்று அடித்தார். அவருக்கு உறுதுணையாக ரூட்டும் ஆடினார். அவரும் அரைசதத்தைக் கடந்தார். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 25 ஓவர்களில் 158 ரன்களை எடுத்தனர். இந்தக் கூட்டணி இங்கிலாந்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ரூட் 68 ரன்களில் ஷம்பாவின் பந்தில் Lbw ஆன போதும் டக்கெட் தொடர்ந்து ஆடினார். பின்னாலயே 4 பீல்டர்களையும் வைத்து கட்டம் கட்டியெல்லாம் வீழ்த்த நினைத்தார்கள். ஆனாலும் அசராமல் நின்று சதமடித்தார். அதன்பிறகும் அதிரடியாகவே ஆடிக்கொண்டிருந்தார். 200 ஐ எட்டாமல் ஓயமாட்டார் என நினைக்கையில் 165 ரன்களில் லபுஷேன் பந்தில் Lbw ஆனார். கடைசியில் ஆர்ச்சர் 10 பந்துகளில் 21 ரன்களை அடித்து ஸ்கோரை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கிக் கொடுத்தார். மற்றபடி வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 352. மிகப்பெரிய டார்கெட். அதிரடியாகவும் ஆட வேண்டும். அதேநேரத்தில் பெரிய பெரிய பார்ட்னர்ஷிப்களும் அமைய வேண்டும் என்ற நெருக்கடியுடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆரம்பமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஓப்பனர் ஹெட்டும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் சொற்ப ரன்களில் அவுட் ஆனர். ஹெட் ஆர்ச்சரின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட். ஸ்டீவ் ஸ்மித் மார்க்வுட்டின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். விக்கெட் அடுத்தடுத்து விழுந்த சூழலிலும் ரன்ரேட்டை பெரிய சுமையாக ஏற விடாமல் ஆஸ்திரேலியா பார்த்துக் கொண்டது. இன்னொரு ஓப்பனரான மேத்யூ ஷார்ட் நின்று அரைசதம் அடித்தார்.
லபுஷேனும் சிறப்பாக ஆடி 47 ரன்களை எடுத்திருந்தார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்த ரிசல்ட்டை அந்த அணிக்கு கொடுக்கவில்லை. ரன்களை வாரி வழங்கினர். அதனால் ஸ்பின்னர்களுக்கு கூடுதல் ஓவர் கொடுக்க வேண்டியிருந்தது. ஜோ ரூட்டெல்லாம் 4 ஓவர்கள் வீசியிருந்தார். இதற்கு பலனும் கிடைத்தது. மேத்யூ ஷார்ட் லிவிங்ஸ்டனின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட். லபுஷேன் அடில் ரஷீத்தின் பந்தில் அவுட். இதன்பிறகுதான் ஜாஸ் இங்லிஸூம் அலெக்ஸ் அலெக்ஸ் கேரியும் கூட்டணி சேர்ந்தனர். 136-4 என்ற நிலையில் இருந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 146 ரன்களை சேர்த்தனர். ஜாஸ் இங்லிஸ் மிகச்சிறப்பாக ஸ்பின்னர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார்.
பின்னங்காலை பயன்படுத்தி கட்களை ஆடினார். இறங்கி வந்து நேராக நிறைய ஷாட்களை ஆடினார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். எந்தவிதமான பந்து வீசப்பட்டாலும் எதிர்கொள்ளும் ஆயுதமாக பல ஷாட்களை கையில் வைத்திருந்தார். அலெக்ஸ் கேரியும் அவருக்கு ஈடு கொடுத்து ஆடி அரைசதத்தை எட்டினார். கேரி 69 ரன்களை கார்ஸின் பந்தில் பட்லரிடம் கேட்ச் ஆனார். அந்த சமயத்தில் ஆஸியின் வெற்றிக்கு 8.2 ஓவர்களில் 70 ரன்கல் தேவைப்பட்டது. டெத்தில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து மீண்டும் ஆட்டத்துக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேக்ஸ்வெல் எல்லாவற்றையும் மாற்றினார். க்ரீஸூக்குள் வந்தவர் படபடவென 15 பந்துகளில் 32 ரன்களை எடுத்து கொடுத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். ஓடிஐயில் தனது முதல் சதத்தை அடித்த இங்லிஸ் 48 வது ஓவரில் மார்க் வுட்டின் பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் சேஸ் செய்திருக்கிறது. ஐ.சி.சி தொடர்களில் ஒரு அணி சேஸ் செய்த அதிகபட்ச டார்கெட் இதுதான். அதை ஒரு இரண்டாம் கட்ட அணியை வைத்து ஆஸ்திரேலியா செய்ததுதான் ஆச்சர்யம்.