நேபாள நாட்டில் கிழக்கு பகுதியில் தப்ளேஜங் மாவட்டத்தில் சர்சைக்குரிய ரோப் கார் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட காவலர்களுடனான மோதலில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தப்ளேஜன் மாவட்டத்தில் பதிபரா பகுதியில் ரோப் கார் திட்டத்தினால் அப்பகுதியிலுள்ள வரலாற்று சிறப்பு அம்சங்கள் அழிவுக்குள்ளாகும் எனக் கூறி அந்த திட்டத்திற்கு எதிராக 'நோ கேபிள் கார்' எனும் குழு போராடி வருகின்றது.
நேற்று பிப்ரவரி 22ம் தேதி போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வன்முறையில் தொடர்புடைய 15 பேரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த வன்முறையைத் தொடர்ந்து, தப்ளேஜங் மாவட்ட அதிகாரிகள் பதிபரா பகுதி உட்பட பல்வேறு இடங்களில் இன்று பிப்ரவரி 23ம் தேதி காலை முதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
அதன்படி, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், பேரணிகள், போராட்டங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20ம் தேதி பதிபரா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டு போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதினால் பதிபரா ரோப் கார் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.