கூடலூர் அருகே விவசாயப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள நீர்க் குட்டையில் விழுந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் (5), பிரணிதா(3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகே காய்கறி பயிர்கள், விவசாயப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான நீர்க் குட்டை ஒன்று உள்ளது.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீரெனக் காணாமல் போனதை அடுத்து, பெற்றோர்கள் தேடி உள்ளனர். அப்போது இரு குழந்தைகளும் நீர்க் குட்டையில் சடலமாகக் கிடந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் குழந்தைகளை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் கூடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் இரண்டு உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.