மக்களால் நான் மக்களுக்காகவே நான் என ஒலித்த கம்பீரக்குரல் இன்று நம்மிடையே இல்லை. இருந்தாலும் அவரால் தொடங்கி வைக்கப்பட்ட பல திட்டங்கள் இப்போதும் நடைமுறையில் இருந்து அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. ஜெயலலிதா பெண்களின் முன்னேற்றத்துக்காக அவர் தீட்டிய பல்வேறு திட்டங்களே, அவரை ‘அம்மா’ என அனைவராலும் போற்றிப்புகழ வைத்தது என்றால் மிகையில்லை.தமிழக அரசியலில் அம்மாவாக என்றென்றும் தன்னை நினைவு கூரப்படும் வகையில் சிங்கப்பெண்ணாக வாழ்ந்து மறைந்தவர்.
சமீப காலமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் என தேர்தல் வாக்குறுதிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல கவர்ச்சிகரமான பெண்களுக்கான வாக்குறுதிகளை அறிவிக்கும் கட்சிகளே தேர்தலில் வெற்றி வாகையும் சூடி வருகின்றன.
தற்போது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ள இந்த ஃபார்முலாவை, 1991ல் முதன் முதலாக தனது தலைமையிலான ஆட்சியில் நடைமுறைப்படுத்தியவர் ஜெயலலிதா. பெண்களுக்காக அவர் கொண்டுவந்த திட்டங்கள் குறித்த ஒரு பார்வை
தொட்டில் குழந்தை திட்டம்:
ஜெயலலிதா முதன் முதலாக முதல்வராக பொறுப்பெற்ற போது 1991- 1996ல் ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தை கொண்டுவந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அந்த காலகட்டத்தில் பெண் சிசுக்கொலை அதிகமாகவும் இருந்த நேரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது.
கைவிடப்படும் குழந்தைகள் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் மூலம் பெறப்பட்டு காப்பகங்களில் வளர்க்கப்பட்டனர். இத்திட்டம் ஜெயலலிதாவின் அடுத்தடுத்த ஆட்சி காலங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் உயிரோடு காப்பாற்றப்பட்டனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: பெண் சிசுக் கொலை அதிகரித்த அதே நேரத்தில் அதனை தடுக்கும் வகையில் ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை’ 1992-ல் கொண்டுவந்தார் ஜெயலலிதா. இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் குறிப்பிட்ட தொகை வைப்புநிதியாக செலுத்தப்பட்டது.இத்திட்டமும் ஜெயலலிதாவின் அடுத்தடுத்த ஆட்சி காலங்களில் மேம்படுத்தப்பட்டு, தற்போது ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அவர் பெயரில் ரூ.50000மும் , இரு பெண் குழந்தைகள் இருப்பின் அவர்கள் பெயரில் தலா ரூ.25000மும் வைப்பு நிதியாக அரசால் செலுத்தப்படுகிறது. இத்திட்டமும் இப்போதுவரை பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மகளிர் காவல் நிலையங்கள்:
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1992ல் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை உருவாக்கினார் . பாதிக்கப்படும் பெண்கள் நம்பிக்கையுடன் புகாரளிக்கும் இடமாக இப்போதுவரை மகளிர் காவல் நிலையங்கள் இருந்து வருகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய கமாண்டோ படையும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்:
பெண்களுக்கு திருமணம் செய்யும் போது அவர்களின் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் ஏற்கனவே இருந்த ‘மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவி திட்டத்தை’ தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமாக மாற்றினார் ஜெயலலிதா. இதன்படி பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ஒரு பவுன் தங்கமும், ரூ.50000 ரொக்கமும் வழங்கப்பட்டது. பெண்களிடையே பெரும் வரவேற்பை இந்த திட்டம் பெற்றது.
அம்மா உணவகம்:
அனைவருக்கும் உணவு என்ற லட்சியத்தின் படி உருவாக்கப்பட்டது அம்மா உணவகம்.தமிழகத்தில் இத்திட்டம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மிக மிக குறைவான விலையில் தரமான உணவு வழங்கும் இத்திட்டம் ஏழைகள், நடைபாதையில் வசிப்பவர்கள், குறைவான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் என பலரின் பசியை இப்போதுவரை போக்கி வருகிறது. தற்போது இத்திட்டத்தை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் செயல்படுத்த தொடங்கியுள்ளன மேலும் அம்மா உணவகங்களில் உணவு சமைக்கும் பணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்டன. இதன்மூலமாக ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது
கோயில்களில் அன்னதானம்:
கோயில்களில் இலவச அன்னதானம் வழங்கும் திட்டம் 2011ல் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டமும் அடுத்தடுத்து பல்வேறு கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தற்போது வரை பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இலவச சைக்கிள், லேப்டாப்:
பெண் குழந்தைகளுக்கும் மற்றும் ஏழை மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம் போன்றவை ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் தான் தொடங்கப்பட்டன
கர்ப்பிணி பெண்கள்:
மகப்பேறு கால நிதியுதவி திட்டம் ஏற்கெனவே இருந்தாலும், அதற்காக உதவித் தொகையை அதிகரித்தார் . ஏழை பெண்களுக்காக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளும் இவரே தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்கு 16 பொருட்கள் அடங்கிய ‘குழந்தைகள் நல பரிசு பெட்டகம்’ ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அறிமுகமானது. மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்துக்காக ‘மகப்பேறு சஞ்சீவி திட்டத்தையும்’ கொண்டுவந்தார்.
பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள்:
பாலூட்டும் தாய்மார்கள் பயணத்தின்போது சந்திக்கும் சிரமங்களை தவிர்க்க பேருந்து நிலையங்களில் ‘தனி அறைகள்’ உருவாக்கப்பட்டன. இத்திட்டம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அனைத்து பொது இடங்களிலும் இப்போது ‘பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள்’ ஒதுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த ‘இலவச நாப்கின் திட்டம்’ இவரது ஆட்சிகாலத்தில் அறிமுகமானது.
இப்படி பெண்களுக்காக அவர் கொண்டுவந்த திட்டங்கள், பெண்களின் முன்னேற்றம் என்ற அளவுகோலை தாண்டி சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது. இதனால்தானோ என்னவோ அனைத்து மக்களாலும் ஜெயலலிதா அம்மா என அன்போடு அழைக்கப்பட்டார்.