PM Modi: ``பட்டப்படிப்பு சான்றிதழை பொதுவில் வெளியிட முடியாது.." - நீதிமன்றத்தில் பல்கலைக் கழகம்!
Vikatan February 28, 2025 09:48 PM

பிரதமர் மோடியின் BA, MA பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா RTI சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை கேட்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த அப்போதைய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி

இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. பிரதமர் மோடி குஜராத் பல்கலைக்கழகத்தில் MA பட்டம் பெற்றுள்ளார் என்றுக் கூறப்படுகிறது. எனவே அந்தக் கல்விச் சான்றிதழ் நகலைப் பார்க்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் 2023-ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 'பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ்களை பிரதமர் அலுவலகம், குஜராத், டெல்லி பல்கலைக்கழகங்கள் வழங்க தேவையில்லை" என்று தீர்ப்பளித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், நீரஜ் சர்மா தொடர்ந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் டெல்லி பல்கலைக் கழகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``பிரதமர் மோடியின் BA பட்டப் படிப்பு சான்றிதழை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார். ஆனால் பொது அரங்கில் வெளியிட முடியாது" என்றார். அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சச்சின் தத்தா கூறும்போது, ``விசாரணை நிறைவடைந்துவிட்டது. தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.