"சீமான் உயிருக்கே அச்சுறுத்தல்"- வளசரவாக்கத்தில் நாதக தொண்டர்கள் சாலைமறியல்
Top Tamil News March 01, 2025 03:48 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தன் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் சீமானின் கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாரு வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் நேற்று ஆஜராகாத நிலையில், அவரது வழக்கறிஞர் ஆஜராகினார். இதனையடுத்து இன்று ஆஜராக வேண்டும் இல்லையென்றால் கைது செய்யப்படுவார் என போலீசார் நேற்று அவரது வீட்டில் சம்மன் ஒட்டினர். இந்த சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்னும் சற்று நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ள நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறைய்னர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற நிலையில் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. காவல்நிலையத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டுவருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.