#featured_image %name%
”தமிழகத்தில் தனது ஆட்சியில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மடைமாற்றத்தான், இல்லாத ஹிந்தித் திணிப்பை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். இதனை மக்கள் ஏற்கவில்லை” என்று, தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூகத் தளப் பக்கங்களில் விவரம் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை குறித்து திமுக., மற்றும் பாஜக., இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், தம் கட்சித் தொண்டர்களுக்கு திமுக., கட்சித் தலைவரும், திமுக., அரசின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்…
வட மாநிலங்களில் டீ, பானி பூரி வாங்கவும், கழிப்பறை பயன்படுத்தவும் ஹிந்தியை கற்றுக் கொள்வது அவசியம் என பா.ஜ.,வினர் சொல்கின்றனர். செயற்கை நுண்ணறிவு காலத்தில், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை திணிப்பது தேவையற்றது. நவீன மொழிபெயர்ப்பு கருவிகள், மொழிப்பிரச்னை என்ற தடையை அகற்றிவிட்டன. கூடுதல் மொழி என்ற சுமையை மாணவர்கள் மீது ஏற்றக்கூடாது. அவர்கள் தாய்மொழியில் புலமை பெறவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற ஆங்கிலம் கட்டாயம். விருப்பப்பட்டால் வேறு எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். – என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இல்லாத ஹிந்தித் திணிப்பைக் கூறி, தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைக்க தான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பெயிண்ட் டப்பாவை ஏந்திய சிலரைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் இன்னும் உணரவில்லை.
தனது கட்சியின் பொதுச்செயலாளர் பேச்சை ஸ்டாலின் தவற விட்டுவிட்டது போல் தெரிகிறது. அவர்தான் ஹிந்தியை முன்னிறுத்துகிறார். தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையைத் தான் வலியுறுத்துகிறது. இதன்படி எந்த இந்திய மொழியையும் மூன்றாவது மொழியாகப் படிக்கலாம்.
எங்களின் கேள்வி எளிதானது. மாநிலத்தில் இரு வேறு விதிகள் ஏன்? தனியார் பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழி படிக்க வாய்ப்பு உள்ள போது, அதனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க மறுப்பது ஏன்?
இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், திமுக., பொதுச்செயலர் துரைமுருகன் முன்பு கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ ஒன்றையும் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் துரைமுருகன், ” பார்லிமென்டிற்கு போக வேண்டும் என்றால் பேசத் தெரிய வேண்டும். பேச வேண்டும் என்றால், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் கட்டாயம் பேசத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்,” எனக் கூறியுள்ள துரை முருகன், இவ்வாறு இரு மொழியும் தெரியாத எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் என்ன விதமான நடத்தையில் இருப்பார்கள் என்றும், அவர்கள் படும் பாடு குறித்தும் துரைமுருகன் நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார். இந்த வீடியோ முன்பே வைரலானது. இந்த வீடியோவை இப்போது பதிவிட்டுள்ள அண்ணாமலை, இது குறித்து ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
News First Appeared in