மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மாவட்ட ஆட்சியர் குழந்தை மீதும் தவறு இருப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்த குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார்.
அவருக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம். விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்? என கூறியுள்ளார்.