ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவை கைது செய்ய சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வ தேச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறை ரோட்ரிகோவைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோட்ரிகோவின் ஆட்சிக் காலத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து, பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை ஹாங்காங்கிலிருந்து வந்தவுடன் மணிலா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 9:20 மணிக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது செய்யப்பட்டதற்கான தகவலை அந்நாட்டு அரசாங்கமே தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸின் அதிபர் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு அறிக்கையில், ஹாங்காங்கிலிருந்து வந்தவுடன் டுடெர்ட்டே கைது செய்யப்பட்டதாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், போலீசார் அவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முன்னாள் அதிபரும், அவரது குழுவினரும் நலமுடன் இருப்பதாகவும், அவர் அரசு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளனர். தற்போது PNP அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.