திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). திருப்பூர் குமார் நகரைச் சேர்ந்தவர் சாரதாமணி. இருவரும் உறவினர்கள். இந்நிலையில், சாரதாமணி சமீபத்தில் ஊத்துக்குளி வட்டம் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார். அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக, இடையபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்திருந்தார். சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் பிரபு (44) மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கவிதா (36) ஆகியோர் ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், அதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை கார்த்திகேயனிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனர். அந்தப் பணத்தை கிராம நிர்வாக உதவியாளர் கவிதா உதவியுடன் கிராம நிர்வாக அலுவலர் பிரவு பெறும்போது, அங்கு மறைந்திருந்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK