மதுரை மாவட்டத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாததால், கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் இளமாறன்(18). இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இளமாறன் மதுரை புது விளாங்குடி கணபதி நகர் பகுதியில் உள்ள தனது பாட்டி அமுதாவின் வீட்டில் தங்கிய இருந்தபடி கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
கல்லூரியில் கடந்த செமஸ்டர் தேர்வுக்கான பணம் கட்ட முடியாத சூழலில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த இளமாறன் இன்று மதியம் திடீரென வீட்டில் ஆள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாத நிலையில், இளமாறனின் பாட்டி அமுதா கதவை தட்டிய போது, அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது இளமாறன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்துள்ளது. பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடல் புதூர் காவல்துறையினர், இளமாறனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கூடல் புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் விசாரணையில் முதற்கட்ட தகவலின் செமஸ்டர் கட்டணம் செலுத்த முடியாதது காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்த நிலையில் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.